தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் நான்காம் கட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்டி நிலையங்களை அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலேயே எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்படைக்கும்.
அந்த வழித்தடத்தில் உள்ள ஏழு எம்ஆர்டி நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ‘படிப்படியாக’ நிறைவை நெருங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அந்த புதிய எம்ஆர்டி நிலையங்களில் ரயில்களை ஓடவிட்டு சோதனை நடத்தி வருவதாக ஆணையம் புதன்கிழமை (டிசம்பர் 13) கூறியது.
சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரவாசிகளுக்குப் பலனளிக்கக்கூடிய அந்த எம்ஆர்டி நிலையங்கள்: தஞ்சோங் ரு, காத்தோங் பார்க், தஞ்சோங் காத்தோங், மரின் பரேட், மரின் டெரஸ், சிக்ளாப் மற்றும் பேஷோர்.
பயணிகளின் சேவைகளுக்காகத் திறக்கப்படுவதற்கு முன்னர் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் அந்த நிலையங்களில் சோதனைகளை மேற்கொள்ளும்.
எவ்வளவு காலத்துக்கு இந்தச் சோதனைகள் இடம்பெறும் என்று ஆணையத்திடம் செய்தியாளர்கள் வினவியபோது, எத்தனை நிலையங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலானது அது என்று ஆணையம் பதில் அளித்தது.
“புதிய நிலையங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை நடத்தும் நிறுவனத்துக்கு சில மாதங்கள் தேவைப்படும்.
“நிலையங்களைப் பற்றி பணியாளர்கள் நன்கு தெரிந்துகொள்ளவும் பராமரிப்புப் பயிற்சிகள், சம்பவங்களைக் கையாளும் முறை போன்றவற்றுக்காகவும் அந்தக் கால அளவு தேவைப்படும்,” என்றது ஆணையம்.
ரயில் சோதனை என்பது மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடியது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் மூன்றாம் கட்டத்தில் அமைந்த எம்ஆர்டி நிலையங்கள் 2022 ஆகஸ்ட் 17ஆம் தேதி எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. சோதனைகளுக்குப் பின்னர் அந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அவை பயணிகளின் சேவைக்குத் திறந்துவிடப்பட்டன.
ஆணையம் தனது 2023 ரயில் கட்டமைப்பு அறிக்கையில் இரண்டு எல்ஆர்டி வழித்தடங்கள் பற்றியும் சில தகவல்களைத் தெரிவித்து உள்ளது.
“புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்தில் 2024ஆம் ஆண்டு புதிதாக இரண்டு ரயில்கள் சேர்க்கப்படும். வரவேண்டிய அதன் 19 புதிய ரயில்களில் ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு இரண்டு புதிய ரயில்கள் வந்து சேர்ந்தன.
“சோதனைகளுக்குப் பின்னர், 1999ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வரும் முதலாம் தலைமுறை ரயில்கள் சேவையிலிருந்து அகற்றப்பட்டு புதிய ரயில்கள் சேர்க்கப்படும்.
“அதேபோல, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி வழித்தடத்தில் இரண்டு பெட்டிகள் அடங்கிய 25 புதிய ரயில்கள் 2024ஆம் ஆண்டு முதல் படிப்படியாகச் சேர்க்கப்பட்டு, பழைய ரயில்களுக்கு விடைகொடுக்கப்படும்,” என்று ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.