ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட 28 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
உட்லண்ட்ஸ் சாலை, மண்டாய் எஸ்டேட் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து சனிக்கிழமை (டிசம்பர் 16) நண்பகல் 12.05 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
நான்கு லாரிகள், இரண்டு டிரக் வாகனங்கள், ஒரு மோட்டார்சைக்கிள் அந்த விபத்தில் சிக்கின.
சம்பவ இடத்துக்குச் சென்ற மருத்துவ உதவியாளர்கள், விபத்துக்குள்ளான லாரிக்கு அடியில் மோட்டார்சைக்கிளோட்டி சிக்கிக்கொண்டதைக் கண்டறிந்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயது ஆண் டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
தமது இருக்கையில் சிக்கிக்கொண்ட மற்றொரு லாரி ஓட்டுநர், மீட்புக் கருவிகளைக் கொண்டு விடுவிக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவரும் மற்ற மூவரும் சுயநினைவுடன் இருந்ததாக அச்செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
காயமுற்ற நால்வர் 22 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அந்த விபத்தில் சம்பந்தட்ட மற்ற இரு ஓட்டுநர்கள் காயமடையவில்லை.
விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.