குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்கள், மெய் சின் ரோட்டில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் வீடமைப்பு வசதிகளுக்குப் பக்கத்தில் ஒரு பூங்காவை எதிர்பார்க்கலாம்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் டிசம்பர் 8ஆம் தேதி தனது பெருந்திட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதில் குவீன்ஸ் குளோசுக்குப் பக்கத்தில் சுமார் 1.4 ஹெக்டர் நிலப்பரப்பில் ஒரு பூங்கா அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பூங்கா இரண்டு காற்பந்துத் திடல்கள் அளவுக்குச் சமமானது.
அந்தப் பூங்காவில் தற்போதுள்ள அலெக்சாண்டிரா-குவீன்ஸ்வே பூங்கா இணைப்புப் பாதை சேர்க்கப்ப்பட்டிருப்பதுடன் குவீன்ஸ் குளோஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளுக்குப் பக்கத்தில் முதிர்ச்சியடைந்த மரங்களையும் கொண்டிருக்கும்.
பூங்காவின் எதிர்புறம், வீடமைப்புக்காக 3.2 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் முன்பு மெய் சின் தொடக்கப் பள்ளியும் மெய் சின் உயர்நிலைப் பள்ளியும் இருந்தன. அவை 2022க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் வீவ கழகத்தால் இடிக்கப்பட்டன.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் திருத்தம் செய்யப்பட்ட உத்தேச பெருந்திட்டத்தில், சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர் காவல்துறையின் குவீன்ஸ்வே முகாம், அமையவிருக்கும் புதிய பூங்காவால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிய வருகிறது. பூங்கா திட்ட எல்லை வரைகோட்டில் காவல்துறை முகாமில் உள்ள பல பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அவை இடிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
அந்த முகாமில் உள்ள பத்து மாடிகளுடைய மூன்று புளோக்குகள் வீவகவால் 1960களில் முற்காலத்தில் கட்டப்பட்டன என்றும் அவற்றில் ‘ரிசர்வ்’ படை என்று அழைக்கப்படும் காவல்துறையின் கலகத்தடுப்புப் படையினரின் குடும்பங்கள் வசித்து வந்தன என்று மரபுடைமை வலைப்பதிவாளரும் எழுத்தாளருமான ஜெரோம் லிம் தெரிவித்தார்.
‘ரிசர்வ்’ படை பின் சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம் என்று 1992ல் பெயர் மாற்றம் பெற்றது. அதில் காவல்துறையில் நாய் பிரிவும் காவல்துறை அதிரடிப் படையும் உள்ளடக்கப்பட்டன.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தின்படி ஆறு ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சிறப்பு செயல்பாட்டுத் தளபத்திய வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.