கிரெடிட் சுவிஸ் வங்கிக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் 3.9 மில்லியன் வெள்ளி அபராதம் விதித்துள்ளது.
தனது சிங்கப்பூர் கிளையில் நல்லுறவு மேலாளர்கள் (ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ்) முறைகேடுகளில் ஈடுபடுவதை அடையாளம் காணவோ தடுக்கவோ கிரெடிட் சுவிஸ் நடவடிக்கை எடுக்காதது அதற்குக் காரணம். அபாரதம் விதிக்கப்பட்ட உடனே அந்த வங்கி அபராதத் தொகையை செலுத்தியதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது
மேலும், இதனால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையர்களுக்கும் அந்த வங்கி ஈடுகட்டியதாகக் குறிப்பிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட முதலீட்டுப் பரிவர்த்தனைகளின் தொடர்பில் கிரெடிட் சுவிசின் நல்லுறவு மேலாளர்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல்களை அளிக்கவில்லை; அதனால் பாதிக்கப்பட்டோர் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் செலுத்தவேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
39 பரிவர்த்தனைகள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.
தனியார் வங்கித் துறையில் கட்டணம், தகவல்களைத் தெரிவிப்பது ஆகியவற்றின் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் சோதனையிட்டது. அதனைத் தொடர்ந்து ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டது.
பரிவர்த்தனை முடிந்த பிறகு மேற்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள், நல்லுறவு மேலாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை அடையாளம் காண அல்லது தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை கிரெடிட் சுவிஸ் மேற்கொள்ளவில்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இதுபோல் மறுபடியும் நிகழாமல் இருக்க கிரெடிட் சுவிஸ் தனது கட்டுப்பாடுகளை முடுக்கி விட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் குறிப்பிட்டது.
தங்களின் வாடிக்கையாளர்கள் நியாயமான கட்டணம் செலுத்த வகைசெய்யும் விதத்தில் நிதி நிலையங்கள் வலுவான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிதி கண்காணிப்புப் பிரிவு துணை நிர்வாக இயக்குநரான குமாரி ஹோ யெர்ன் ஷின் கூறினார்.