பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில தான் பொது நலன் குறித்த பிரச்சினைகளில் அரசாங்கத்தை அணுகி செயல்பட்டு வந்துள்ளது.
அத்துடன், அரசின் செயல்களை அது உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் அதன் வழிதான் வருங்காலத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்கும் என்பதுடன் பிரச்சினைகள் குறித்து பொறுப்பேற்கவும் வைக்க முடியும் என்று எதிரக்கட்சித் தலைவரும் பாட்டாளி கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் சனிக்கிழமை (டிசம்பர் 30) தனது புத்தாண்டுச் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டில் நாட்டிற்காக தமது பாட்டாளிக் கட்சியின் பங்களிப்புகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளிலும், மிக உயர்மட்ட இடங்கள் உட்பட, கடுமையான சரிபார்த்தல், சரிசெய்தல் முறையை அமல்படுத்துவது இன்றியமையாதது. இதன்மூலமே வருங்காலத்தில் பிரச்சினைகள் எழாமல் அரசை பொறுப்பேற்க வைக்க முடியும்.
“இதைக் கருத்தில்கொண்டே நாடாளுமன்றத்தில் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் நாங்கள் அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து அரசாங்கம் அதன் முடிவுகளுக்கு விளக்கம் அளிக்க வைத்துள்ளோம்,” என்று திரு பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
ஆனால், இந்தச் சரிபார்த்தல், சரிசெய்தல் முறை சிங்கப்பூருக்கு நன்மை அளிக்கும் என்பதை தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று தெரிகிறது எனத் திரு சிங் குறிப்பிடுகிறார்.
இதன் தொடர்பில் நவம்பர் மாதம் ஆளும் மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பேசிய பிரதமர் திரு லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பதாலேயே நல்ல அரசாங்கத்துக்கு வழிவிடும் என்று கூறிவிட முடியாது என்று பேசியதை திரு பிரித்தம் சிங் நினைவுகூர்ந்தார்.