சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பதாக பொய்யான, அவதூறான அறிக்கைகளை வெளியிட்ட முன்னாள் சீர்திருத்தக் கட்சி உறுப்பினர் டேடியஸ் தாமஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரின் சட்டச் செலவுகளையும் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
சண்முகம், அவரது மனைவி, அவருடயை கள்ளக்காதலி எனக் கூறப்பட்டவர் குறித்த விளக்கங்களைக்கொண்ட காணொளியை வெளியிட்ட ‘thaddeusthomas81’ என்ற டிக்டாக் கணக்கு தம்முடையது என்பதை 2023 டிசம்பர் 21ஆம் தேதி ஒரு டிக்டாக் பதிவில் திரு தாமஸ் ஒப்புக்கொண்டார்.
“2023 ஆகஸ்ட் 17ஆம் தேதி திரு கா. சண்முகம் தொடர்பில் பொய்யான, அவதூறான அறிக்கைகளை எனது ‘ டிக்டாக் ’ கணக்கில் வெளியிட்டேன். அந்தச் செய்திகள் பொய்யானவை என்றும் ஆதாரம் இல்லாதவை என்றும் ஒப்புக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
“மன்னிப்பும் பொறுப்பேற்பும்” என்ற தலைப்பிலான அந்தக் குறிப்பில், ஆகஸ்ட் 25ஆம் தேதி ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக திரு சண்முகத்தின் வழக்கறிஞர்கள் தமக்கு அனுப்பிய கடிதத்தை தாம் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் திரு தாமஸ் ஒப்புக்கொண்டார்.
“திரு கா. சண்முகத்தால் என்னை அடையாளம் காணவோ, அணுகவோ முடியாது என்று நான் நம்பியிருந்தேன். ஏனெனில், எனது தொடர்பு விவரங்கள் எனது பதவிகளிலிருந்து பெறமுடியாதவை.”
“அதனால் டிக்டாக் பதிவை நான் அகற்றவில்லை. திரு கா. சண்முகத்தின் வழக்கறிஞர்களுக்குப் பதில் அளிக்கவில்லை,” என்றார் அவர்.
பின்னர் அந்த பதிவை டிக்டாக் நிறுவனம் அகற்றியது.
பொய்த்தகவலை பதிவிட்ட மூவர் பற்றிய தகவலை, அவர்கள் மீது வழக்கு தொடுக்க ஏதுவாக, டிக்டாக் அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென எனக் கட்டாயப்படுத்த டிக்டாக்கிற்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளுக்கு திரு சண்முகம் விண்ணப்பித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியைப் படித்த பின்னர் நவம்பர் 30ஆம் தேதி வழக்கறிஞர்களின் கடிதத்திற்கு தாம் பதிலளித்ததாக திரு தாமஸ் கூறினார்.
ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17 வரை அந்த விவகாரம் குறித்த குற்றச்சாட்டுகள் அடங்கிய காணொளிகளை பதிவேற்றம் செய்ய ‘trusted.selller’, ‘thaddeusthomas8’, ‘tharakhussin’ ஆகிய கணக்குகள் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, அந்தக் கணக்குகளின் பயனர்கள் குறித்த விவரங்களை வெளியிட டிக்டாக்கை கட்டாயப்படுத்த திரு சண்முகம் முயன்றதாக ஸ்ட்ரெஸ்ட்ஸ் டைம்ஸ் முன்பு தெரிவித்தது.
அந்த பயனர்களின் விவரங்களைப் பெறுவது, பொய்ச் செய்திகள் தொடர்பாக தாம் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்க, சந்தேகத்துக்கு உரியவரை அடையாளம் காண உதவும் என்று திரு. சண்முகம் அரசு நீதிமன்றங்களில் தாக்கல் செய்த ஆவணங்கள் தெரிவித்தது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி, அமைச்சரின் வழக்கறிஞர்கள் ‘தாரக் ஹுசின்’, ‘டேடியஸ் தாமஸ்’ ஆகிய இரு ஃபேஸ்புக் பயனர்களுக்கு டிக்டாக் பதிவுகளை அகற்றுமாறும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்குமாறும் கடிதம் எழுதினர்.
கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை.
அந்தப் பதிவுகள் பொய்யானவை, “கடுமையான அவதூறைக்” கொண்டுள்ளது என்பதால் அவற்றைப் பார்வையாளர்கள் பார்க்க முடியாதவாறு தடுக்க வேண்டும் என தமது வழக்கறிஞர்கள் மூலம், திரு சண்முகம் டிக்டாக்கிற்கு கடிதங்கள் அனுப்பினார்.
டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தாம் அந்த அறிக்கைகளை வெளியிட்டபோது சீர்திருத்தக் கட்சி உறுப்பினராக இருந்ததாக திரு தாமஸ் தெரிவித்தார். அவர் தனது பொய்யான டிக்டாக் பதிவை இடுவதற்கு ஆலோசனையும் ஊக்கவிப்பும் பெற்றதாகக் கூறினார். அந்த அறிவுரைக்குச் செவிமடுத்தற்கு தாம் வருத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“எனது செயலுக்காக வருந்துகிறேன். பொய்யான, அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக தயக்கமின்றி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர். இந்த அறிக்கை அவரது ஃபேஸ்புக் பதிவிலும் வெளியிடப்பட்டது.
“மோசமான அவதூறுகளைச்” செய்தபோதும் நஷ்டஈடு கேட்க வேண்டாம் என்று தமது கோரிக்கையை திரு சண்முகம் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சரின் சட்ட செலவுகளை தாம் ஏற்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் மேலும் எந்த அறிக்கையையும் வெளியிடவோ அல்லது அதே அளவு அல்லது அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவோகூடாது என்பதையும் திரு தாமஸ் ஏற்றுக்கொண்டார்.
திரு தாமஸின் ‘ டிக்டாக்’ கணக்கின் விவரத்தில் அவர் ‘சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்’ என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த அரசியல் கட்சியின் இணையத்தளத்தில், அதன் மத்திய செயற்குழு பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சியை விட்டு வெளியேறியபோது திரு தாமஸை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அணுகியது.