புத்தாண்டு நாளன்று சிங்கப்பூரிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் திரண்டனர்.
கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் அனைத்திலும் கூட்டம் அலைமோதியது. சிறப்பு வழிபாடுகளோடு அன்னதானமும் விருந்தும் இடம்பெற்றன.
சிங்கப்பூரின் பல இடங்களிலும் மழை தொடர்ந்து பெய்தபோதும் மக்கள் அதைப் பொருட்படுத்தாது இறை தரிசனத்திற்காக ஒன்றுகூடினர்.
சாங்கி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு வழிபடச் சென்றிருந்த கீர்த்தி ராஜன், காலையில் நடந்த சிறப்புப் பூசைக்குப் பிறகு அங்கு இடம்பெற்ற நண்பகல் அன்னதானத்திலும் பங்கேற்றார்.
“அனைவரும் ஒன்றுகூடி, வழிபாட்டில் கலந்துகொண்டது எனக்குப் பெருமகிழ்ச்சியளித்தது,” என்றார் கீர்த்தி ராஜன்.
“இவ்வாண்டு சிங்கப்பூர்வாழ் அன்பர்களும் இந்தியாவில் இருக்கும் என் குடும்பத்தினரும் வளமாக வாழவேண்டும். அனைவரும் வேலையிடங்களில் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் புத்தாண்டு வேண்டுதல்,” என்றார் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் முருகனுக்குப் பழமாலையிட்ட வெளிநாட்டு ஊழியர் நாகராஜன் மதன், 30.
சிட்டி மிஷன்ஸ் இந்தியன் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் சபை மக்கள், ‘சிட்டி ஹப்’பில் டிசம்பர் 31ஆம் தேதியில் இரவு 10.15 மணியளவில் ஒன்றுகூடி, 2024 விடிந்ததும் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். சிறப்புப் பிரார்த்தனைகளுக்குப் பின்பு ஒன்றாக உணவுண்டு களித்தனர்.
“வந்திருந்த அனைவரும் 2023 கழிந்ததற்காக இறைவனிடம் நன்றிகூறி, புத்தாண்டில் இறைவனின் அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். பின்னிரவு 2-2.30 மணி வரை நிகழ்ச்சி நீடித்தது,” என்றார் தேவாலயத்தின் போதகர் ஜான் பிரிட்டோ.
புத்தாண்டு நாளன்று காலையில் குடும்பத்துடன் செயின்ட் பர்னடெட் தேவாலயத்திற்குச் சென்றுவந்த கிறிஸ்டினா செல்வம், “சென்ற ஆண்டு சிரமங்களைச் சந்தித்தோர் இவ்வாண்டு அவற்றைக் கடக்கவேண்டும். குடும்பங்களில் ஒற்றுமை, மனங்களில் அமைதி நிலவவேண்டும்,” என வேண்டிக்கொண்டதாகச் சொன்னார்.
“உலகில் அனைத்துப் போர் பூசல்களும் முடிந்து, நல்லுறவு தழைத்தோங்க வேண்டும். பணவீக்கம் குறைந்து, வணிகங்கள் மேம்பட்டு, நாடுகள் முன்னேற வேண்டும். அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும்,” என தன் விருப்பத்தைத் தெரிவித்தார் சுல்தான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த கேரி ஹாரிஸ்.
முஹாஜிரின் பள்ளிவாசலுக்கு மதிய தொழுகைக்காக வந்த ஹுஸைன் பாதுஷா, “ஒவ்வோர் ஆண்டின் முடிவும் ஒரு புதிய வாய்ப்பையும் துவக்கத்தையும் கொடுக்கிறது,” என்றார்.