அடுத்த பதினைந்து நாட்களில் ஃபேர்பிரைஸ் விற்பனை நிலையங்களில் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டைப் பயன்படுத்துவோர் கூடுதல் பயனடையலாம்.
ஜனவரி 17ஆம் தேதிவரை ஃபேர்பிரைஸ் கடைகளில் ஒரே பரிவர்த்தனையில் செலவிடும் ஒவ்வொரு $80 மதிப்புள்ள சிடிசி பேரங்காடி பற்றுச்சீட்டுக்கு $8 மாற்றுப் பற்றுச்சீட்டை (ரிட்டன் வவுச்சர்) ஃபேர்பிரைஸ் வழங்கும்.
அந்த $8 ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டை அது வழங்கிய மறுநாள் முதல் பிப்ரவரி 29ஆம் தேதிவரை பயன்படுத்தலாம். அந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்த குறைந்தபட்ச செலவு குறித்த விதிமுறைகள் இல்லை. பல பற்றுச்சீட்டுகளை ஒரே பரிவர்த்தனையில் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக மூன்று பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் ஜனவரி 3ஆம் தேதி அறிவித்தது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிடிசி பற்றுச்சீட்டுகளை ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிவைத்தபோது, பங்கேற்கும் பல பேரங்காடிக் கடைகள், சிடிசி பற்றுச்சீட்டுகளை தங்கள் கடைகளில் பயன்படுத்த விரும்புவோருக்கு கூடுதல் தள்ளுபடிகள் அல்லது கழிவுகளை வழங்கும் என்று கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபேர்பிரைஸ் குழுமம், தனது மாற்றுப் பற்றுச்சீட்டு சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2023ல், சிடிசி பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி செலவிடப்படும் ஒவ்வொரு 55 வெள்ளிக்கும் கூடுதலாக $6 பற்றுச்சீட்டை வாடிக்கையாளர்கள் பெற்றனர்.
குறையாத பணவீக்கம், விநியோகத் தொடரில் உள்ள ஏற்ற இறக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்கள் தங்கள் அன்றாட தேவைகள் உட்பட தங்கள் செலவினங்களைக் குறைக்க வேண்டியிருந்தது என்று ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாகி விபுல் சாவ்லா கூறினார்.
“சமூக நிறுவனமாக, உதவி தேவைப்படும் நேரத்தில் நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு உதவது நமது இலக்கு,” என்றார் அவர். “அரசாங்கத்தின் ஆதரவுத் தொகுப்புத் திட்டங்களுடன் கூடுதலாக இந்தச் சலுகையை வழங்குவதன் மூலம் இதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டில், தள்ளுபடி, கழிவு, சமூக நன்கொடைகள், மாற்றுப் பற்றுச்சீட்டுத் திட்டங்கள் மூலம் பயனீட்டாளருக்கு கிட்டத்தட்ட $200 மில்லியன் திருப்பித் தந்துள்ளது என்று ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
2024ன் முதல் பாதியில் 500 அத்தியாவசிய பொருட்களுக்கான 1 விழுக்காடு பொருள்,சேவை வரி உயர்வை ஃபேர்பிரைஸ் ஏற்றுக்கொள்ளும் என்று நவம்பர் மாதத்தில் அறிவித்தது.
ஃபேர்பிரைஸ், கோப்பிதியாம், என்டியுசி ஃபுட்ஃபேர், என்டியுசி லிங்க் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தக் குழுமம், முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை, சமூக சுகாதார உதவித் திட்டமான நீல அட்டை வைத்திருப்பவர்களுக்கான தனது தள்ளுபடித் திட்டங்களை 2024 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாகக் கூறியது.
2024ஆம் ஆண்டுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுத் திட்டம் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் $500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்குகிறது. இதில் பாதியை பலபொருள் அங்காடிகளிலும், மீதிப் பாதியை பங்குபெறும் உணவங்காடிகள், அக்கம்பக்கக் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியான, இந்தத் திட்டத்தின் மூலம் 1.27 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் பயனடையும். இதற்கு $635 மில்லியன் செலவிடப்படுகிறது.
ஆங் மோ சூப்பர்மார்க்கெட், கோல்ட் ஸ்டோரேஜ், ஃபேர்பிரைஸ், ஜயன்ட், ஹாவ் மார்ட், பிரைம், ஷெங் சியோங், யு ஸ்டார்ஸ் ஆகிய எட்டு பேரங்காடிகளில் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். இவை மொத்தமாக சிங்கப்பூர் முழுவதும் 415 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளன.
சிடிசி பற்றுச்சீட்டு குறித்த விவரங்களை https://vouchers.cdc.gov.sg/ என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.