2023ஆம் ஆண்டுக்கான ஜிசிஇ சாதாரணநிலைத் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் 11ஆம் தேதியன்று வெளியிடப்படுகின்றன.
தேர்வு எழுதிய மாணவர்கள் அவரவர் உயர்நிலைப்பள்ளிகளுக்குச் சென்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு ஜனவரி 4ஆம் தேதியன்று தெரிவித்தது.
நோய்வாய்ப்பட்டிருக்கும் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று கல்வி அமைச்சு கூறியது.
அதற்குப் பதிலாகத் தங்கள் சார்பாக அவர்கள் வேறொருவரை அனுப்பிவைக்கலாம்.
மாணவர்கள் சார்பாகத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்பவர்கள் அதற்குத் தேவையான ஆவணங்களைப் பள்ளியிடம் காட்ட வேண்டும்.
இத்தகைய ஏற்பாடு செய்ய முடியாவிடில் பள்ளிகளின் உதவியை மாணவர்கள் நாட வேண்டும்.
பள்ளி சாரா மாணவர்களாகத் தேர்வு எழுதியோர் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழக இணையவாசல் வழியாக தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்பாஸ் கணக்கு இல்லாதவர்கள் இணையவாசல் கணக்கைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், பள்ளி சாரா மாணவர்ளாகத் தேர்வு எழுதியவர்கள் ஆகியோருக்கு ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து அவர்களது மின்னஞ்சலுக்கு படிவம் ‘ஏ’யின் மின்னிலக்க வடிவம் அனுப்பிவைக்கப்படும்.
அதில் மாணவர்களின் தேர்வு முடிவுகளும் அவர்கள் எந்தெந்த மேற்படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
மாணவர்கள் தங்கள் மேற்படிப்புத் தெரிவுகளை ஜனவரி 11ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து ஜனவரி 16ஆம் தேதி மாலை 4 மணி வரை கூட்டுப் பள்ளி சேர்க்கைப் பயிற்சி இணையத்தளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
இதற்கான முடிவுகள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று குறுந்தகவல், கூட்டுப் பள்ளி சேர்க்கைப் பயிற்சி இணையத்தளம் ஆகியவை மூலம் வெளியிடப்படும்.
தொடக்கக் கல்லூரி, மிலேனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் சேர்ந்துப் பயிலத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அந்தந்த கல்வி நிலைங்களுக்கு பிப்ரவரி 2ஆம் தேதியன்று செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்ல முடியாததற்குத் தகுந்த காரணங்கள் கொண்டுள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்துடன் தொடர்புகொண்டு அங்கு சேர்ந்துப் பயில கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏற்பதாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிலையம் இடத்தை ஒதுக்கிவைக்கும்.
தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்துப் பயில தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிலையங்களுக்கு எப்போது செல்வது குறித்த தகவல் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மின்னஞ்சல் அல்லது கடிதம் வழி தெரிவிக்கப்படும்.