சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் 11வது வேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
அவரை வரவேற்றுப் பேசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டான் எங் சாய், சிங்கப்பூர் கல்வி முறைக்கும் குடிமக்களின் வாழ்நாள் கல்வித் திட்டத்திற்கும் அதிபர் தர்மனின் பங்களிப்பை வியாழக்கிழமை (ஜனவரி 4) பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.
பொருளியல் நிபுணராக, அரசியல் தலைவராக, அனைத்துலக ரீதியில் கொள்கை வகுப்பாளராகவும் தனிப்பெரும் புகழ் பெற்றவராய் விளங்கியதை பேராசிரியர் டான் சுட்டினார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் டான், திரு தர்மன் கல்வி அமைச்சராக 2003ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை பணியாற்றிய காலத்தில் அவருடன் தான் இணைந்து பணியாற்றியதை பெருமைபடக் கூறினார்.
“அவருடைய பதவிக் காலத்திலும் பின்னர் பொதுச் சேவையில் அவர் வகித்த மற்ற பதவிக் காலங்களிலும் அவர் பல்வேறு வழிகளில் சிங்கப்பூரின் கல்வி முறையை வடிவமைத்தார். அத்துடன், வெவ்வேறு திறன்களைக் கொண்ட நீக்குப்போக்கான தகுதி அடிப்படை முறையை அவர் வகுத்தார்,” என்று பேராசிரியர் டான் புகழாரம் சூட்டினார்.
மேலும், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் என்னும் வாழ்நாள் கற்றல் திட்டத்தை சிங்கப்பூரர்களுக்கு அறிமுகம் செய்து திறன் மேம்பாட்டுக்கு அதிபர் தர்மன் அடிகோலிட்டார் என்று பேராசிரியர் டான் விளக்கினார்.