வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளைத் தடுக்கும் தெரிவு, கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட இருக்கிறது.
மோசடிகளுக்கு எதிராக தொடர்பு, தகவல் அமைச்சால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை வழங்குவதாக சீனமொழி நாளிதழான சாவ்பாவுக்கு அளித்த பேட்டியில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
ஆன்ட்ராய்ட் கைப்பேசிகளில் இணையத்தை ஊடுருவும் மென்பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கூகலுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் இலக்கு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆன்ட்ராய்ட் கைப்பேசிகளில் இணையத்தை ஊடுருவும் மென்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்பையும் மின்னிலக்க நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவதில் அது கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் டியோ தெரிவித்தார்.
தொடர்பு, தகவல் அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், அறிவார்ந்த தேசக் குழுமம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அரசாங்க தொழில்நுட்ப முகவை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைக் கொண்டு பணிக்குழு அமைக்கப்படுகிறது.
“இன்றைய காலகட்டத்தில் கைப்பேசியைப் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருந்தால் கைப்பேசியில் அழைப்பு வரும்போது +65 என்று பார்த்தால் அது உள்ளூர் அழைப்பில்லை என்றும் அது வெளிநாட்டிலிருந்து வருகிறது என்றும் தெரியும். அத்தகைய அழைப்புகளை விழிப்புடன் இருப்பவர்கள் ஏற்பதில்லை. ஆனால் இது எரிச்சலூட்டும் வகையில் உள்ளது.
“எனவே, வெளிநாட்டு அழைப்புகளை எதிர்பார்க்காதவர்களுக்கு புதிய தெரிவு ஒன்றை வழங்க இருக்கிறோம். அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் அழைப்புகள் அனைத்தையும் முழுமையாகத் தடுத்துவிடலாம்,” என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
பொதுமக்களைக் குறிவைத்து மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ஆக அதிகமான மூன்று உத்திகளில் கைப்பேசி அழைப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் வாயிலாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கைப்பேசி மூலம் மோசடிக்காரர்களால் தொடர்புகொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,908.
குறுந்தகவல்களால் தொடர்புகொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 920.
இந்நிலையில், அறிமுகப்படுத்தப்படும் புதிய தெரிவினால் வாட்ஸ்அப் அழைப்புகள் போன்ற தொடர்பு முறைகள் மூலம் நடத்தப்படும் மோசடிகளைத் தடுக்க முடியாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய தெரிவைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவோரின் கைப்பேசிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் அழைப்புகள் அனைத்தும் தடுக்கப்படும்.
ஆனால் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் எண்களைக் கொண்டு வரும் அழைப்புகளைத் தொடர்ந்து பெற முடியும் என்றும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஜனவரி 4ஆம் தேதியன்று தெரிவித்தது.