கேலாங் சிராய் சந்தையிலும் இரவுச் சந்தையிலும் அமைக்கப்பட்ட கடைகளில் பொருள்கள் விற்ற ஐவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தினர்.
அந்த ஐவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் சகோதரர்கள்.
அந்த மூன்று சகோதரர்களும் தாங்கள் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்திய ஆறு ஊழியர்களுக்கு முறையான தங்குமிட வசதி செய்துதரவில்லை.
அதனால் அந்த ஊழியர்களில் சிலர் விற்பனைப் பொருள்களை வைத்திருந்த கடைகளிலேயே, கடை மூடிய பிறகு, தரையில் படுத்து உறங்க வேண்டியிருந்ததாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மனிதவள அமைச்சின் அதிகாரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி கேலாங் சிராய் நோன்புப் பெருநாள் சந்தையில் சோதனை நடத்தினர். அப்பொழுது கெர் எங் கியட், கெர் எங் ஹாக் என்ற இரு சகோதரர்களின் சட்டவிரோத செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
இது பற்றிய விசாரணையில், அந்த இரு சகோதரர்களும் பயணிகள் வருகை அனுமதி அட்டை வைத்திருந்த ஆறு இந்தோனீசியர்களைப் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. அவர்கள் கடை ஊழியர்களாக உணவு தயாரித்து விற்பனை செய்வது, அதற்குரிய பணம் பெறுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக அமைச்சு தெரிவித்தது.
சட்டவிரோதமாக ஐந்து இந்தோனீசியர்களைப் பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 52 வயது நிரம்பிய எங் கியட்டுக்கு ஜனவரி 4ஆம் தேதி ஒருமாத சிறைத்தண்டனையும் $23,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இவர் இதேபோன்ற குற்றத்துக்காக கடந்த 2013ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய சகோதரரான 53 வயது எங் ஹாக் முறையான வேலை அனுமதி அட்டை இல்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தியிருந்தார். அவருக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதியன்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் இவர்களுடைய இளைய சகோதரர் யோங் சென், 41, மற்றொரு சிங்கப்பூரரான டான் ஹோ சூன், 70, என்பவருடன் இணைந்து முறையான வேலை அனுமதி அட்டை இல்லாத இரு வெளிநாட்டு ஊழியர்களை அங் மோ கியோ இரவுச் சந்தை ஒன்றில் பணியில் அமர்த்த கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
டான், யோங் சென் ஆகிய இருவருக்கும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலா $8,500 அபராதம் விதிக்கப்பட்டது.