மதிக்குமார் தாயுமானவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘யாமக்கோடங்கி’ நூல் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, விக்டோரியா சாலையில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் காலை 10.30 மணிக்கு அறிமுகம் காண இருக்கிறது.
இந்தத் தொகுப்பு டிசம்பர் 31ஆம் தேதி தமிழகத்தில் சென்னை கவிக்கோ மன்றத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தலைமையில் சால்ட் பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. யாமக்கோடங்கி கவிதைத் தொகுப்புப் பற்றிய தனது பார்வையைக் கவிஞர் ஸ்டாலின் சரவணன் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் கவிதைத் தொகுப்பை பாகீரதி மதிக்குமார் வெளியிட பூமாதேவி தாயுமானவன் பெற்றுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வில், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்புகளின் விரிவுரையாளர் முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன் சிறப்புரை வழங்க உள்ளார்.
மேலும் கவிஞர் யாழிசை மணிவண்ணன் நூலைப் பற்றிய அறிமுக உரையையும், எழுத்தாளர் செந்தில்குமார் நடராஜன் ஆய்வுரையையும் வழங்க உள்ளனர்.
இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு 9326 4096 எனும் எண்ணை அழைக்கலாம்.