ஜாலான் புக்கிட் மேரா வட்டாரத்தில் மேலும் பத்து பேருக்குக் காசநோய் ஏற்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் அவ்வட்டாரத்தில் இப்பிரச்சினை முதன்முதலாகத் தலைதூக்கியது.
எனவே, ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 3,000 பேருக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனையை சுகாதார அமைச்சு நடத்துகிறது.
அந்த வட்டாரத்தில் இருப்பவர்களில் வேறு யாருக்கெல்லாம் காசநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அடையாளம் காணவும் நோய்ப் பரவலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கிட்டத்தட்ட 3,000 பேரில் புளோக் 1 மற்றும் 3ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள், பணிபுரியும் ஊழியர்கள், ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் பணிபுரிபவர்கள், புளோக் 3ல் உள்ள மூத்தோர் நடவடிக்கை நிலையத்தின் ஊழியர்கள், அங்கு செல்லும் மூத்தோர் ஆகியோர் அடங்குவர்.
சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுவே ஆகப் பெரிய கட்டாய காசநோய் பரிசோதனை நடவடிக்கை என்று சுகாதார அமைச்சு ஜனவரி 5ஆம் தேதியன்று தெரிவித்தது.
புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள பத்து பேர் 2022ஆம் ஆண்டு புளோக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் பாதிக்கப்பட்ட ஏழு பேருடன் மரபியல் ரீதியாகத் தொடர்புடையவர்கள் என்று அமைச்சு கூறியது.
இதுவரை அந்த வட்டாரத்தில் மொத்தம் 28 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இருப்பினும், 2022ஆம் ஆண்டில் 1,251 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்குக் காசநோய் ஏற்பட்டது.
காசநோய் காற்று வழி பரவக்கூடியது என்றும் அதைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசநோயால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தும்மல், இருமல் வழியாக அந்நோய் பரவும் என்று அமைச்சு கூறியது. பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், நாள்கள் அல்லது வாரக்கணக்கில் நீண்ட நேரத்துக்குத் தொடர்பில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நோய் பரவும் அபாயம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
குவளைகள், தட்டுகள், உணவு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது மூலம் காசநோய் பரவாது என்று அமைச்சு கூறியது.
கை குலுக்குவதாலும் முத்தமிடுவதாலும் படுக்கை உறைகளைத் தொடுவதாலும் ஒரே கழிவறையைப் பகிர்ந்துகொள்வதாலும் காசநோய் பரவாது என்றும் தெரிவிக்கப்பட்டது.