போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான ஊழல் விசாரணை மிகுந்த கவலையை ஏற்படுத்தும் விவகாரம் என்றும் அந்த விவகாரம் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்தக் குழுத் தொகுதியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குடியிருப்பாளர்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.
வாழ்க்கைச் செலவினம், சமத்துவமின்மை போன்ற முக்கிய விவகாரங்களை எதிர்கொள்ள அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கும் சீனமொழி நாளிதழான சாவ்பாவுக்கும் அளித்த பேட்டியில் அமைச்சர் லீ தெரிவித்தார்.
“இந்த ஊழல் தொடர்பான விசாரணை குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்ற அக்குழுத் தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை எங்களால் ஒன்றிணைத்து, அவர்களுக்குப் புத்துணர்ச்சியூட்ட முடிந்தது,” என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் உள்ள பூன் லே வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் லீ கூறினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்துக்குத் தலைமைதாங்கும் திரு ஈஸ்வரன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று லஞ்ச, ஊழல் புலன்விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்வரன் தொடர்பான விசாரணை குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஈஸ்வரன் தற்போது விடுப்பில் உள்ளார். அவரது மாதச் சம்பளம் $8,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகையை அவர் தொடர்ந்து பெற்றுவருகிறார்.
“ஈஸ்வரன் தொடர்பான ஊழல் விசாரணை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளபோதும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதே எங்கள் இலக்கு. இந்த விவகாரத்தால் எங்கள் கவனம் சிதறவில்லை. குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுகிறோம். குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் எவ்விதத் தடையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
இருப்பினும், எந்த மாதிரியான தாக்கம் என்று அவர் விவரிக்கவில்லை.