மூத்த வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான தகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாதாடும் ஆற்றல், சட்டம் தொடர்பான அறிவுத்திறன், நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டவர்களே மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவர்.
யாரும் எதிர்பார்த்திடாத இந்த அறிவிப்பை ஜனவரி 8ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற புதிய சட்ட ஆண்டுக்கான தொடக்க விழாவில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அறிவித்தார்.
வழக்கமாக, புதிய சட்ட ஆண்டுக்கான தொடக்க விழாவில் தலைமை நீதிபதி பேசி முடித்ததும் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவோரின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
ஆனால் இவ்வாண்டில் மூத்த வழக்கறிஞர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை என்று திரு சுந்தரேஷ் மேனன் அறிவித்தார்.
அனைத்துலக மூத்த வழக்கறிஞர்களின் தரத்துக்கு நிகரானவர்களாக சிங்கப்பூரின் மூத்த வழக்கறிஞர்கள் இருக்க, அவர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிவரம்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் சட்டத்துறை மற்றும் வழக்கறிஞர் பணியின் மேம்பாட்டுக்கு அதிகம் பங்களித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்,” என்று திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
மூத்த வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு ஆண்டுக்கு ஒருமுறை கூடி விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து முடிவெடுக்கும்.
குழுவில் தலைமை நீதிபதி, தலைமைச் சட்ட அதிகாரி, மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆகியோர் இடம்பெறுவர்.
மூத்த வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் 1997ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதுவரை 98 பேர் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2014ஆம் ஆண்டில் யாரும் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்படவில்லை.
சட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உரையாற்றினார்.
நெறிமுறை மற்றும் நிபுணத்துவத் தரம், சட்டக் கல்வி, அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களை உருவாக்குவது ஆகியவை குறித்து அவர் பேசினார்.
முறையான, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், மேம்படுத்தப்பட்ட பயிற்சி மற்றும் நெறிமுறையை வகுத்தல், கூடுதல் நீடித்த நிலைத்தன்மையுள்ள வாழ்க்கைத் தொழில் ஆகியவற்றை இளம் வழக்கறிஞர்கள் விரும்புகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக திரு சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்
சட்டத்துறை நெறிமுறை மற்றும் நிபுணத்துவ நெறிமுறைகளை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு தாம் அமைத்த குழு ஒன்றின் தலைமையின்கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
மாறிவரும் எதிர்பார்ப்புகளை சட்ட நிறுவனங்கள் அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்த திரு சுந்தரேஷ் மேனன், உயர் நிபுணத்துவ தரநிலையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தவும் திறமைமிக்கவர்களைச் சட்டத்துறையில் நீடித்திருக்கச் செய்யவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.