கடும் பாலியல் குற்றங்கள் புரிந்து நீண்டகால சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகும் சிலர் மீண்டும் அத்தகைய குற்றங்களைப் புரிகின்றனர்.
அப்படிப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க புதிய தண்டனை விதிப்பு முறை ஜனவரி 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடுமையான பாலியல் குற்றங்கள், கடுமையான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோருக்கு அது பொருந்தும். முதல்முறை குற்றவாளிகளும் அதற்கு உட்படுத்தப்படுவர்.
‘எஸ்இபிபி’ எனப்படும் பொதுமக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அளிப்பதற்கான தண்டனை விதிப்பு முறை குற்றவியல் நடைமுறை (பல அம்ச திருத்த) மசோதாவின்கீழ் அறிமுகமானது.
அதன்படி கடுங்குற்றங்களைப் புரிந்தோர் தண்டனையை நிறைவேற்றியபின் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது நிச்சயமன்று. குறிப்பாக இது மீண்டும் அக்குற்றங்களைப் புரியும் அறிகுறிகள் காண்பிப்போருக்குப் பொருந்தும்.
புதிய மசோதாவைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், “சிங்கப்பூரில் சிலர் இளம் பெண்களைக் குறிவைப்பதை அறிகிறோம். அவர்கள் பாலியல் வன்கொடுமையில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீண்டும் பெண்களைக் குறிவைத்து குற்றம் புரிகின்றனர்,” என்று தெரிவித்தார்.
தற்போது நடப்பில் இருக்கும் தண்டனை விதிப்பு முறைகள் அத்தகைய கடுங்குற்றங்கள் புரிவோரைக் கையாளப் போதுமானவை அல்ல என்று சட்ட அமைச்சும் உள்துறை அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது. பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேவையான காலகட்டத்துக்கு அத்தகைய குற்றவாளிகளைத் தடுத்து வைக்க எஸ்இபிபி முறை வழிவகுக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றவாளிகள், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, சட்டபூர்வ வயதை அடையாதோருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது போன்ற கடும் பாலியல் குற்றங்களைப் புரிந்தோர் ஆகியோர் மட்டுமே எஸ்இபிபி தண்டனை விதிப்பு முறைக்கு உட்படுத்தப்படுவர்.
குறைந்தது 21 வயதானோருக்கு அது பொருந்தும். முதல்முறை குற்றவாளிகளும் அதற்கு உட்படுத்தப்படுவர்.
எஸ்இபிபியின்கீழ் ஒரு குற்றவாளி ஐந்திலிருந்து 20 ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். அவர்களின் சிறைத் தண்டனைக் காலமும் குறைக்கப்படாது.