குடும்ப வன்முறை பற்றி புகார் அளிப்பதில் வழிகாட்ட மேலும் பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிகவும் உறுதியான மற்றும் நிலையான முடிவெடுக்க அந்த அம்சங்கள் உதவும் என்றார் அவர்.
“பயிற்சி வழங்க மட்டுமல்ல; என்ன பிரச்சினை, எப்போது புகார் அளிக்க வேண்டும் என்பனவற்றை சமூக சேவை நிபுணர்களுக்குத் தெரிவிக்கும் வகையில், தரப்படுத்தப்பட்ட அம்சங்களாக அவை இருக்கும்,” என்று அமைச்சர் கூறினார்.
குழந்தை பாலியல் கொடுமை, தத்தெடுக்கும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை குறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நான்கு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருவாட்டி சுன் பதிலளித்துப் பேசினார்.
பதின்மப் பெண்ணை தத்து எடுக்க விரும்பிய ஆடவர் ஒருவர் அப்பெண்ணை பாலியல் கொடுமை செய்ததற்காக கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகள் இடம்பெற்றன.