குடிபோதையில் இருந்த தோழியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
அவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பளிக்கப்படும்போது அந்த ஆடவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு மானபங்க குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அந்த 39 வயது பிலிப்பீன்ஸ் ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று ராஃபிள்ஸ் பிளேஸ் வட்டாரத்தில் மதுபானக்கூடம் ஒன்றுக்கு அந்த ஆடவரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் வேறு இருவருடன் சென்றனர்.
அங்கு அவர்கள் அளவுக்கு அதிகமான மதுபானம் குடித்தனர். அப்பெண் குடிபோதையில் வாந்தி எடுத்தார்.
பின்னிரவு 1 மணி அளவில் அவர்கள் அனைவரும் மதுபானக்கூடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அந்த ஆடவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே டாக்சியில் சென்றனர்.
அப்போது அப்பெண்ணை அவர் மானபங்கம் செய்ததாக அறியப்படுகிறது.
அப்பெண்ணை அந்த ஆடவர் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அப்பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். ஆனால் அவரிடமிருந்து அந்தப் பெண் ஒருவழியாகத் தப்பினார்.
அந்த வீட்டிற்கு அப்பெண்ணின் காதலன் வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து தமது நெருங்கிய நண்பர்களிடம் அப்பெண் தெரிவித்தார்.
மகளிருக்கு ஆதரவு வழங்கும் அமைப்பின் உதவியையும் அவர் நாடினார். சில நாள்கள் கழித்து காவல்துறையிடம் அப்பெண் புகார் அளித்தார்.
குற்றவாளிக்கு ஜனவரி 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.