செல்லப்பிராணி, வனவிலங்கு கடத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் கடந்தாண்டு மார்ச் மாதம் 337 பறவைகளைக் கடத்தியதே ஆகப் பெரியளவில் நடந்த கடத்தல் சம்பவம் என்று தேசிய பூங்காக் கழகமும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அதில் சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களுக்கு 72 வாரங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விலங்குகளைக் கடத்துவது தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள ஆகக் கடுமையான தண்டனை இது.
இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் வாகனம் ஒன்றைச் சோதனையிட்டதில் ஐந்து நாய்க்குட்டிகளும் மூன்று பூனைக்குட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவே 2024ஆம் ஆண்டின் முதல் விலங்குக் கடத்தல் சம்பவம் என்று கூறப்படுகிறது.
காரின் மாற்று டயர் பகுதியில் விலங்குகள் பதுக்கிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் 42 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தற்போது விசாரணை நடந்துவருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
2021ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 180 வனவிலங்கு வகைகளை கழகம் பறிமுதல் செய்துள்ளது. விலங்குகளின் விற்பனை குறித்து சந்தேக நபர்கள் ‘டெலிகிராம்’ போன்ற தளங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.