சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு விலை நிலையாவதற்கான கூடுதல் அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
வட்டி விகித உயர்வு, அண்மைய சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள், பொருளியல் நிச்சயமற்றதன்மை ஆகியவற்றுக்கு இடையே வீடு வாங்குவோர் மிகக் கவனமாகச் செயல்படுவது இதற்குக் காரணம்.
2023ன் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு வாடகை குறைந்தது. மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக இவ்வாறு இந்த வீடுகளின் வாடகை குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலான தனியார் வீடுகள் விற்பனைக்கு வந்தது இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக்குப்பின் ஆக அதிக எண்ணிக்கையில் தனியார் வீடுகள் 2023ல் விற்பனைக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு விற்பனைக்கு வந்த தனியார் வீடுகளின் எண்ணிக்கை 21,284. அதற்கு முந்தைய ஆண்டு விற்பனைக்கு வந்த தனியார் வீடுகளின் எண்ணிக்கையைப்போல் இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.
2023ன் இறுதிக் காலாண்டில், நில மறுசீரமைப்பு ஆணையத்தின் ஒட்டுமொத்த தனியார் வீட்டு விலைக் குறியீடு 2.8 விழுக்காடு உயர்ந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் அது 0.8 விழுக்காடாகப் பதிவானது.
சென்ற ஆண்டு முழுவதும் தனியார் வீட்டு விலை 6.8 விழுக்காடு உயர்ந்தது. 2022ல் அது 8.6 விழுக்காடாக இருந்தது.
2023ன் நான்காம் காலாண்டுக்கான ஆணையத்தின் ஒட்டுமொத்த தனியார் வீட்டு வாடகைக் குறியீடு 2.1 விழுக்காடு சரிந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் அது 0.8 விழுக்காடு அதிகரித்தது.