ஈசூனில் உள்ள புளோக் ஒன்றில் மூன்று மாடிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று ஏற்பட்ட மின்சாரத் தீச் சம்பவங்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மின்சார விநியோகம் 17 மணிநேரத்துக்கு தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈசூன் அவென்யூ 11 புளோக் 443ல் தீ ஏற்பட்டதாக தங்களுக்கு வியாழக்கிழமை இரவு பின்நேரம் 12.45 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
அந்த புளோக்கின் 7, 8, 9வது மாடிகளில் உள்ள மின்சார மீட்டர்கள் தீப்பிடித்ததாக அறியப்படுகிறது. தீயணைப்பு அதிகாரிகள் வருவதற்கு முன் ஏழாம், ஒன்பதாம் மாடிகளில் ஏற்பட்ட தீ அணைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீதமிருந்த தீயும் காய்ந்த பொடி தூவும் கருவி கொண்டு அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இது குறித்து கருத்துரைத்த நீ சூன் நகரமன்ற பேச்சாளர் ஒருவர், பொறியாளர் ஒருவர், எஸ்பி பயனீட்டுக் குழுமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஆகியோர் மின் விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த பணியாற்றி வருவதாகக் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி நேரப்படி இறுதிக்கட்ட சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த மின்வெட்டு ஒவ்வொரு மாடியிலும் உள்ள சில வீடுகளைப் பாதித்திருப்பதாக அந்தப் பேச்சாளர் விளக்கினார்.
அந்த புளோக்கின் நான்காம் மாடியில் வசிக்கும் ஒருவர், மின்வெட்டால் தம்மால் வேலை செய்ய முடியவில்லை என்று கூறியதாக ஷின் மின் செய்தித்தாள், தனது வாசகர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார் என்று தெரிவித்தது.