காவல்துறை, மொத்தம் $10 மில்லியன் இழப்பு தொடர்பான 1,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
இவற்றில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 367 பேரை அது விசாரிக்கிறது. அவர்களில் 248 பேர் ஆண்கள்; 119 பேர் பெண்கள். சந்தேக நபர்கள் 16 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது.
வர்த்தக விவகாரப் பிரிவையும் ஏழு காவல் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள், ஜனவரி 19ஆம் தேதிக்கும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கும் இடையில் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
முதலீட்டு மோசடி, மின்வர்த்தக மோசடி, இணையக்காதல் மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக அவர்கள் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கியது போன்றவை தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
பண மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அதிகபட்சம் $500,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $125,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.