முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபார்முலா 1 (எஃப்1) பந்தயம் குறித்து கணக்காய்வு நடத்தி வருகிறது.
இரவு நேர எஃப்1 பந்தயத்தை சிங்கப்பூரில் நடத்துவது குறித்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கும் சிங்கப்பூர் ஜிபி நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் அக்கறைகளைக் கருத்தில்கொண்டு அந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான கிரேஸ் ஃபூ திங்கட்கிழமையன்று (5 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் கூறினார்.
எஃப்1 பந்தயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு திருவாட்டி ஃபூ பதிலளித்தார். ஈஸ்வரன் விவகாரத்தில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிங்கப்பூரில் நடந்த எஃப்1 பந்தயங்களின் தொடர்பில் திரு ஈஸ்வரனுக்கும் செல்வந்தர் ஓங் பெங் செங்குக்கும் இடையிலான உறவைப் பற்றி முழு ஆய்வு நடத்துமாறு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டதா என்ற கேள்வியும் அவற்றில் அடங்கும். திரு ஓங் பெங் செங், சிங்கப்பூர் கிராண்ட் பிரி நிறுவனத்தின் தலைவராவார்.
2007ஆம் அண்டில் சிங்கப்பூரில் எஃப்1 பந்தயங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பிறகு 2012, 2017, 2022ஆம் ஆண்டுகளில் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
தற்போது நடப்பில் இருக்கும் ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டு நிறைவடையும்.
முன்னதாக அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்களை அரசாங்கம் நன்கு ஆராய்ந்திருந்ததாக திருவாட்டி ஃபூ சொன்னார். சுயேச்சையாக இயங்கும் ஓர் ஆலோசனை நிறுவனமும் ஒப்பந்ததை ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் எஃப்1 ஒப்பந்தங்களோ மற்ற ஒப்பந்தங்களோ அரசாங்கத்துக்கு ஏற்ற வகையில் வரையப்படவில்லை என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.