‘எஸ்ஜி எனேபல்’ திட்டத்தின் மூலம் 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு உடற்குறையுள்ள 900 பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 500 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும் 80 விழுக்காட்டினர் அதாவது ஏறத்தாழ 400 பேர் குறைந்தது 6 மாதங்களாவது அந்த வேலைகளில் இருந்துள்ளனர்.
இந்த தகவல்களை மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
அங் மோ கியோ குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அந்த தகவலை திருவாட்டி ஹுவாங் வெளியிட்டார்.
‘எஸ்ஜி எனேபல்’ அமைப்பு உடற்குறை உள்ளவர்களுக்கு வேலை தேட உதவ தொடர்பு திறன் குறைபாடு ஆதரவு நிலையும் உள்ளிட்ட பங்காளி அமைப்புகளுடன் இணைந்து உதவுகிறது.
உடற்குறையுள்ளவர்களுக்கு ஏற்ற வேலைகள், பணி தொடர்பான பயிற்சிகள் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.
வேலையிடத்தில் எப்படி சிறப்பாக செயல்படுவது, எப்படி வேலை தேடுவது போன்ற திறன்களும் அவர்களுக்கு கற்றுகொடுக்கப்பட்டது.
மேலும் முதலாளிகள் உடற்குறை உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட வேலைகள் தரலாம், அவர்களை தங்கள் வேலையிட சூழலுக்கு மாற்ற உதவுவது குறித்தும் அமைப்பு உதவியதாக திருவாட்டி ஹுவாங் கூறினார்.
உடற்குறை உள்ளவர்கள் அவர்களது வேலையில் மேம்படவும் அவர்களது திறன்களை வளர்த்துகொள்ளவும் உதவித்திட்டங்களை வகுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள் உடற்குறை உள்ளவர்களில் 40 விழுக்காட்டினரை வேலையில் அமர்த்த இலக்கு கொண்டுள்ளதாகவும் திருவாட்டி ஹுவாங் குறிப்பிட்டார்.