சென்ற ஆண்டிறுதிக்குள் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போதுமான இடங்கள் இல்லாத பாலர்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தெரிவித்தார்.
2022 முதல் 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அத்தகைய பாலர்பள்ளிகள் இருக்கும் பகுதிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 9) குறிப்பிட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அது பதிலளித்தது.
“பொதுவாக குறிப்பிடத்தக்க அளவில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் இடம்பெறும் வட்டாரங்களில்தான் போதுமான அளவில் பாலர்பள்ளி இடங்கள் இருப்பதில்லை,” என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான தேவை கூடியதாகவும் பிரபல பாலர்பள்ளிகளில் இடம்பிடிக்கக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் 2022ஆம் ஆண்டு வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பொங்கோல், செங்காங் போன்ற வட்டாரங்களுக்கு இது பொருந்தும்.
2022ல் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான இடங்களும் மழலையர் பராமரிப்பு இடங்களும் 90 விழுக்காடு அதிகரித்தன என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு சுட்டியது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக சில பகுதிகளில் பாலர்பள்ளிக் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. குடும்பங்களுக்கிடையே பாலர்பள்ளி இடங்களுக்கான தேவையும் அதிகரித்தது. இவையே, சில பகுதிகளில் கைக்குழந்தைகளை கவனிப்பதற்கான இடங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணங்கள் என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான லியாங் எங் ஹுவா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு திரு மசகோஸ் எழுத்து வடிவில் இவ்வாறு பதிலளித்தார்.
திரு லியாங், 2024, 2025ஆம் ஆண்டுகளில் கைக்குழந்தை கவனிப்பு இடங்களைப் பிடிக்கக் காத்திருப்போர் பட்டியல், அவர்கள் காத்திருக்கவேண்டிய கால அவகாசம் உள்ளிட்டவற்றை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கண்காணிக்கிறதா என்று கேள்ளி எழுப்பினார்.
அந்த வகையில், உகந்த நடவடிக்கைகளை எடுக்க பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, சம்பந்தப்பட்ட பாலர்பள்ளி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக திரு மசகோஸ் சொன்னார். கூடுதலானோரை வேலைக்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.