மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) பகுதியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த கடல்நாக ட்ரோன் காட்சி இரண்டு நாள்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காட்சியைக் காண்பதற்கான அனுபவத்தை மேம்படுத்தவும் அந்தப் பகுதியில் போக்குவரத்தைச் சீர்படுத்தவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எம்பிஎஸ் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தேதி மாற்றம் செய்யப்பட்டதற்கான கூடுதல் காரணங்கள் அது தெரிவிக்கவில்லை.
புதிய நிரலின்படி கடல்நாக ட்ரோன் காட்சி பிப்ரவரி 15, 16, 18 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்குத் தொடங்கும். முன்னதாக அந்தக் காட்சிகள் இரவு 8 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வானிலை மோசமாக இருந்தால் காட்சி இரவு 10 மணிக்குத் தொடங்கும் சாத்தியமும் உள்ளது.
கடல்நாக ட்ரோன் காட்சியின் முதல் நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றபோது, சில ஆயிரம் பார்வையாளர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால், அவர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை எம்பிஎஸ் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.