குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க சமூக ஊழியர்கள் விடுக்கும் வேண்டுகோளை பூர்த்தி செய்ய புதிய நிதி திரட்டுத் தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கம்போங்ஸ்பிரிட் (KampungSprit) எனும் அந்த நன்கொடை திரட்டும் தளம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 86 நன்கொடையாளர்களிடமிருந்து 4,515 வெள்ளி வரை திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிதியால் சக்கர நாற்காலி, சலவை இயந்திரம், பெரியவர்களுக்கான ‘டயபர்’ போன்ற புதிய பொருள்கள் உட்பட 17 வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் நலன்களுக்காக பல்வேறு இணையத்தளங்களை உருவாக்கி வரும் ‘கவ்டெக்’கின் ‘ஓப்பன் கவர்ன்மண்ட் புரோடக்ட்ஸ்’ (ஓஜிபி) எனும் பிரிவு புதிய தளத்தை வழிநடத்துகிறது.
ஓஜிபியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஜேன் டன்யாடா, குடும்பங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் சமூக ஊழியர்களை நம்பி ‘கம்போங்ஸ் பிரிட்’ பாணி நன்கொடை தளம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமூக ஊழியர் குடும்பங்களின் அத்தியாவசிய பொருள்களின் தேவையை அறிந்தவர்கள் என்றார் அவர்.
“ஒவ்வொரு பட்டியலுக்கான காரணத்தை அவர்கள்தான் எழுதுகிறார்கள். இதனால் நன்கொடையாளர்கள் ஒவ்வொரு வேண்டுகோளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கின்றனர். தங்களுடைய நன்கொடையால் பொருள்களை பெறுவோரின் வாழ்க்கை மேம்படுவதையும் நன்கொடையாளர்கள் அறிந்துகொள்ள முடிகிறது,” என்றும் அவர் கூறினார்.
இதுவரை ஆக அதிக விலையுள்ள கோரிக்கையாக 10.5 கிலோ ஆற்றல் கொண்ட சலவை இயந்திரம் இருந்துள்ளது. இதற்கு நிதி திரட்ட இரண்டு நாள்கள் ஆனது. மதியிறுக்கம் (ஆட்டிசம்) பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்காக மேசை கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை இரண்டு மணி நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்டது.