ஏமாற்றி மூதாட்டி ஒருவரிடமிருந்து 20,000 வெள்ளி பெற்ற முன்னாள் சொத்து முகவருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று (14 பிப்ரவரி) அந்நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மூதாட்டியின் கூட்டுரிமை வீட்டை விற்க உதவிய பிறகு குற்றவாளியான 58 வயது லூயிஸ் இக்னேஷியஸ் டான் புவா மெங் அவ்வாறு செய்தார்.
ஏமாற்றிப் பணம் பறித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை முன்னதாக அவர் ஒப்புக்கொண்டார். குற்றம் புரிந்தபோது டான், சவில்ஸ் ரெசிடென்ஷியல்ஸ் நிறுவனத்துக்கு வேலை செய்தார்.
டான், மூதாட்டியிடம் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை.
2019ஆம் ஆண்டில் அவர் 80 வயது மூதாட்டி ஒருவரின் கூட்டுரிமை வீட்டை விற்றுத்தர உதவினார். சாங்கியில் இருக்கும் அந்த வீட்டை விற்றதன் மூலம் மூதாட்டிக்கு 462,000 வெள்ளி கிடைத்தது.
அந்தத் தொகையைச் சேமிக்க 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டானும் மூதாட்டியும் சேர்ந்து கூட்டு வங்கிக் கணக்கைத் திறந்தனர். காலம் முழுவதும் மூதாட்டியைக் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்த டான், கூட்டு வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைத் தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் அவர் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 வெள்ளித் தொகையை எடுத்தது தெரிய வந்தது.