தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பட்டயம் பெறும் மாணவர்கள் நிரப்புத் தொகையாக மொத்தம் $15,000 பெறுவர்.
இது அவர்களுக்கு பொருளியல் ரீதியாகவும் நிபுணத்துவ தொழில் ரீதியாகவும் கூடுதல் ஆதரவு வழங்கும் அரசாங்க முயற்சிகளின் ஓர் அம்சம் என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) அன்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தனது வரவுசெலவு திட்ட அறிக்கையை வாசிக்கும்போது தெரிவித்தார்.
அத்துடன் இது பலதுறைத் தொழில்கல்லூரி, பல்கலைக்கழக பட்டதாரிகளைவிட தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள் மிகவும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் விளக்கினார்.
இந்த தொழில்நுட்ப கல்விக் கழக முன்னேற்ற விருதுத் திட்டத்தில் 30 வயது, அதற்கும் கீழ் வயதான மாணவர்கள் தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டயக் கல்விக்கு பதிவு செய்யும்போது அவர்களது உயர்நிலைப் பள்ளிக்கு பிந்திய கல்விக் கணக்கில் $5,000 நிரப்பப்படும். இது அவர்கள் பட்டயக் கல்விச் செலவைக் ஈடுசெய்ய உதவும்.
இவர்கள் பட்டயக் கல்விச் சான்றிதழ் பெறும்போது இவர்களின் சேம நிதி சாதாரணக் கணக்கில் $10,000 நிரப்பப்படும். இது அவர்கள் வீடு வாங்குவதற்கும் ஓய்வுக்கால சேமிப்புக்கும் உதவும் என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார்.
“இளைய தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் அவர்களை ஊக்குவிப்பதோடு ஆதரவும் அளிக்க விரும்புகிறோம். இதன்மூலம், அவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற துறையில் சிறந்து விளங்கவும் நல்ல வாழ்க்கைத் தொழிலையும் மேம்பட்ட வருமானத்தையும் பெற இயலும் என்று திரு வோங் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய திரு வோங், “பல தொழில்களுக்கு இடையேயான வருமானத்தை உயர்த்துவது முக்கியம். பல தொழில்களுக்கு இடையே வருமான இடைவெளி அதிகமாக இருந்தால் அது சமுதாயத்தில் பதற்றம், மன அழுத்தத்தை உருவாக்கும்,” என்று தெரிவித்தார்.
“பெற்றோர், பிள்ளைகள் யாவரும் கல்வி போட்டா போட்டியில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அது இல்லையெனில் மாணவர்களின் தனித்துவ திறன்களில் கவனம் செலுத்தாமல் சில பாரம்பரிய தொழில்துறைகளுக்கு முன்னுரிமை வழங்குவர்,” என்று அவர் சொன்னார்