பிடோக் ரெசர்வார் பூங்கா வழியாக பாசிர் ரிஸ் பூங்காவுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கும் இடையே பொதுமக்கள் மிதிவண்டியில் செல்லவும் மெதுவோட்டத்தில் ஈடுபடவும் மாற்றுப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
புதிய 600 மீட்டர் பிடோக் பூங்கா இணைப்புப் பாதையை பிப்ரவரி 17ஆம் தேதியன்று தேசிய பூங்காக் கழகம் திறந்துவைத்தது.
இந்தப் புதிய பாதை சுங்கை பிடோக் நீர்நிலைக்கு அருகில் உள்ளது.
தெம்பனிஸ் அவென்யூ 9, அவென்யூ 10 ஆகிய இடங்களில் அண்மையில் முழுமையடைந்த பூங்கா இணைப்புகளையும் சேர்த்து புதிய பிடோக் பூங்கா இணைப்பின் மொத்தம் தூரம் 3.2 கிலோ மீட்டருக்கும் அதிகம்.
சாங்கி கடற்கரைப் பூங்காவிலும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் மூன்று புதிய மிதிவண்டி பாலங்களைக் கட்ட இருப்பதாக கழகம் அறிவித்தது.
சிங்கப்பூர் முழுவதும் இணைப்புப் பாதைகளை விரிவுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இத்திட்டம் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இயற்கை எழில்மிக்க இடங்களுக்கு நேரில் சென்று அவற்றைப் பொதுமக்கள் ரசிக்கலாம் என்று கழகம் கூறியது.
கிழக்குக் கடலோரப் பாதை தொடர்பாக 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அது படிப்படியாகத் திறக்கப்பட்டது.
இந்நிலையில், 18 கிலோ மீட்டர் கிழக்குக் கடலோரப் பாதை முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டதாக பிப்ரவரி 17ஆம் தேதியன்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
“2021ஆம் ஆண்டிலிருந்து இந்த வட்டாரக் குடியிருப்பாளர்களும் மற்ற வட்டாரங்களில் வசிப்பவர்களும் கிழக்கு கடலோரப் பாதையில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். இப்பாதையின் மூலம் அவர்களால் இயற்கையை ரசிக்க முடிகிறது.
“அதுமட்டுமல்லாது, இயற்கை எழில்மிக்க இந்த இடத்தில் குடும்பங்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் ஆகியோர் ஒன்றுகூடி மகிழலாம். இதன்மூலம், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் பரிவுமிக்க, பசுமைமிக்க, துடிப்புள்ள சமூகத்தை உருவாக்க இத்தகைய பொது இடங்கள் உதவுகின்றன.
“கிழக்குக் கடலோரப் பாதையில் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவழித்து தலைமை தலைமுறையாக நீடிக்கும் மறக்க முடியாத, இன்ப நினைவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்,” என்று திரு ஹெங் கூறினார்.