நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருள் பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானப் பயணச்சீட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புறத்துக்கு நன்மை பயக்கும் நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருளை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும்.
இதற்கு அரசாங்கம் புதிய தீர்வை அறிமுகப்படுத்துகிறது
இதனால் விமானப் பயணச்சீட்டுகளின் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்வு மூலம் வசூலிக்கப்படும் பணம், நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருளைப் பேரளவில் வாங்க பயன்படுத்தப்படும்.
சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய இந்த எரிபொருள் பெரும்பாலும் கழிவுப்பொருள்களால் தயாரிக்கப்படுகிறது.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளைவிட இது மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை அதிக விலை கொண்டது.
ஆனால் விமானப் போக்குவரத்துத்துறை கரிம வெளியேற்றத்தைக் குறைக்க இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலைத்தன்மை விமான நடுவக் கட்டமைப்புத் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் பிப்ரவரி 19ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.
திட்டத்தின் அறிமுக விழா மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருள் பயன்பாட்டை ஆதரிக்க சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களுக்கான பயணச்சீட்டு விலையை அதிகரிப்பது இத்திட்டத்தில் ஒரு பகுதியாகும்.