சிங்கப்பூரின் புதிய விமானப் படைத் தலைவராக பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் ஃபான் சியூ சியோங், மார்ச் 22ஆம் ஆண்டு பதவி ஏற்கிறார்.
இந்தத் தகவலை தற்காப்பு அமைச்சு வெளியிட்டது.
தற்போது மேஜர் ஜெனரல் கெல்வின் கோங் பூன் லியோங் அப்பதவியை வகிக்கிறார்.
சிங்கப்பூர் விமானப் படையின் தலைமைத்துவம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்காப்பு அமைச்சு பிப்ரவரி 19ஆம் தேதியன்று அறிக்கை வெயிட்டது.
மேஜர் ஜெனரல் கோங்கின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
44 வயது பிரிகேடியர் ஃபான் 1998ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்தார்.
தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப் படையிலும் அவர் பல பதவிகளை வகித்தவர்.
முழுமைத் தற்காப்பு 40 இயக்கத்துக்கும் இவ்வாண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட முழுமைத் தற்காப்புப் பயிற்சி, ‘எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடி’ ஆகியவற்றுக்கும் அவர் தலைமைத் தாங்கினார்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று சிங்கப்பூர் விமானப் படையின் தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கோங்கின் சேவைகளுக்குத் தற்காப்பு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.