கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) புவி கண்காணிப்பகத்தைச் சேர்ந்த இரண்டு அறிவியலாளர்கள் அதிகம் ஆராயப்படாத பேரண்ட்ஸ் கடலை ஆய்வு செய்யும் தங்களது பயணத்தைத் தொடங்கினர். ஆய்வகங்கள் நிரப்பப்பட்ட ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் டாக்டர் யான் யூ டிங்கும் திருவாட்டி டோ யுன் ஃபானும் தனது ஆய்வைக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அக்கடலில் மேற்கொண்டனர்.
டிரோம்ஸோ பல்கலைக் கழகமும் நார்வேயின் ஆர்டிக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வை வழிநடத்தின. கடலுக்கு அடியிலிருக்கும் இயற்கை மீத்தேன் உமிழ்வுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் பூமி, கடல் அறிவியலில் முன்னேறவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
பொதுவாக,பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் பனிப்பாறைகள் உருகும் இடங்களைக் கண்டறிய தங்கள் செவித்திறனை நம்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில், டாக்டர் ஹரி விஷ்ணுவும் அவருடன் ஆய்வு மேற்கொள்ளும் சக அறிவியலாளர்களும் ஸ்வால்பார்ட்டின் செங்குத்தான மலைப்பாறைகளுக்கு இடையே இருக்கும் குறுகலான கடற்பகுதிகளில் களப்பணி செய்தனர். அவர்கள் பனிப்பாறைகளுக்கு அருகில் ஒலி உணரிகளைப் பொருத்தி ஆய்வு நடத்தினர்.
“பனிப்பாறைகள் நீருக்கடியில் உருகும்போது காற்றுக் குமிழ்கள் வெடிப்பது போன்ற சத்தத்தை உருவாக்கும். இந்த ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தி பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிப்பதே எங்கள் நீண்ட கால நோக்கம்,” என என்யுஎஸ்சில் மூத்த ஆய்வாளராக இருக்கும் டாக்டர் ஹரி விஷ்ணு கூறினார்.