சிங்கப்பூரில் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களும் கடைத் திருட்டுகளும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. ஆனால் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
பிப்ரவரி 19ஆம் தேதி குற்றச்செயல் பற்றிய ஆண்டு அறிக்கையை காவல்துறை வெளியிட்டது. அதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
நேரடிச் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டின் 20,193லிருந்து 2023ல் 19,966க்கு குறைந்தது என்று காவல்துறை கூறியது.
அதே சமயத்தில் கடைத் திருட்டு, மானபங்கம், மறைந்திருந்து பார்ப்பது போன்றவை அதிகரித்துள்ளன.
கடைத் திருட்டுகள் 21 விழுக்காடு கூடியிருக்கிறது. 2022ல் 3,244 சம்பவங்களிலிருந்து இது 2023ல் 3,939க்கு அதிகரித்துள்ளது. இது, நேரடி குற்றச்சம்பவங்களில் இருபது விழுக்காடாகும்.
2023ல் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இது, 2022ல் 424 சம்பவங்களாக இருந்தன. ஆனால் 12 விழுக்காடு கூடி 2023ல் 476 சம்பவங்கள் நடந்துள்ளன.
குடியிருப்புப் பகுதிகள்(151), கடைத் தொகுதிகள்(84), பொதுப் போக்குவரத்து (56) போன்ற இடங்களில் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
குடியிருப்பு வளாகங்களில் நடந்த 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமான அவர்களது காதலர்கள், முன்னாள் காதலர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக வாடகைதாரர்களால் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
கடைத் தொகுதிகள் அல்லது பொதுப் போக்குவரத்துகளில் நடந்த மறைந்திருந்துப் பார்க்கும் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள்.
இதற்கிடையே வீடு, கட்டடங்களில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டில் நடந்த 1,729லிருந்து 2023ல் 1,695க்கு குறைந்தது.
குடியிருப்பு வட்டாரத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் ரொக்கம், நகைகள், கைப்பேசிகள், ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றின் தொடர்பிலானவை.
குடியிருப்பு, வர்த்தகக் கட்டடங்களில் நடந்த பெரும்பாலான திருட்டுச் சம்பவங்களில் குற்றம் செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் வாடகைதாரர்கள், அறையில் தங்குபவர்கள், குடும்ப உறுப்பினர்கள், சேவை வழங்குவோர் போன்றோர் என்று காவல்துறை தெரிவித்தது.
மொத்த மானபங்கச் சம்பவங்களும் 2022ஆம் ஆண்டின் 1,610லிருந்து 2023ல் 1,528க்குக் குறைந்தது.
இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பாதி பேர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர்கள்.