ஊழியர்களின் சம்பள விவரங்களை ‘தானாகச் சேர்த்துக்கொள்ளும் திட்ட’த்தில் (ஏஐஎஸ்) இணைந்துள்ள முதலாளிகளில் பத்தில் ஒரு முதலாளி, கடந்த 2023ஆம் ஆண்டுக்கான ஊழியர்களின் வருமான்அ விவரங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் பிப்ரவரி 20 ஆம் தேதி தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் ஏஐஎஸ் திட்டத்தின்படி ஊழியர்களின் சம்பள விவரங்களை ஏஐஎஸ்ஸில் சேர்க்காத 900க்கு மேற்பட்ட முதலாளிகளுக்கு $1 மில்லியனுக்கு மேலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த முதலாளிகளுக்குப் பலமுறை நினைவூட்டப்பட்டும் ஊழியர்கள் குறித்த விவரங்களைச் சரியான நேரத்தில் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.
அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களில் உணவகங்கள், உணவங்காடிக் கடைகள், கோப்பிக் கடைகள், பொது ஒப்பந்ததாரர்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவையே அதிகம்.
ஏஐஎஸ் மென்பொருளைக் கையாளும் ஊழியரின் மாற்றத்தாலும் அதனால் ஏற்பட்ட நிர்வாகத்துறை சவாலாலும் அந்த கால தாமதம் ஏற்பட்டது என நிறுவனங்கள் காரணம் கூறியதாக ஆணையம் தெரிவித்தது.
மார்ச் 1ஆம் தேதிக்குள் ஊழியர்களின் வருமானம் குறித்த தகவலை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் நினைவூட்டியுள்ளது.
இது ஏஐஎஸ் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு அல்லது 2023ஆம் ஆண்டில் ஐந்து ஊழியர்கள் அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருந்த நிறுவனங்களுக்குப் பொருந்தும். அவ்வாறு சரியான தேதிக்குள் ஊழியர் வருமான விவரங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகும் என்று ஆணையம் தெரிவித்தது.
சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இது 2023-ல் $1,000 உயர்த்தப்பட்டது. இயக்குநர்கள் அல்லது பங்காளிகளால் இயங்கும் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.