கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை வேலை மோசடி மூலம் குறைந்தது 3,006 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 45.7 மில்லியன் வெள்ளி இழந்துள்ளனர்.
இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை காவல்துறை வெளியிட்டது.
மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், போன்ற தகவல் பரிமாற்றத் தளங்கள் மூலம் பொதுமக்களை அணுகுகின்றனர். பின்னர் வேலை வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி சில வேலைகளை இலவசமாகப் பெறுகின்றனர்.
மேலும் மோசடிக்காரர்கள் அவர்கள் வைத்திருக்கும் வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் பொதுமக்களைச் சேர்த்துவிட்டு லாபம் அதிகமாக சம்பாதிக்கும் முறையைச் சொல்லித்தருவதாகவும் கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
முதலீட்டு மோசடிகளில் பாதிக்கப்படுபவர் மோசடிக்காரர்களால் தகவல் பரிமாற்றக் குழுக்களுடன் சேர்க்கப்படுவர். அதில் மற்றவர்கள் (தாங்கள் மோசடிக்கு ஏதுவாக) லாபம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மோசடிக்காரர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது போலவும் போலியான பதிவுகளைப் பதிவேற்றுவர்.
மோசடிக்காரர்கள் தாங்கள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதாகக் கூறி மக்களை ஈர்க்கின்றனர். சமூக ஊடகங்களில் உள்ள தங்கள் கணக்குகளைப் பின்பற்றுமாறு விளம்பரங்கள் செய்கின்றனர்.
சிலருக்குப் போலியான வேலை ஒப்பந்தங்களையும் மோசடிக்காரர்கள் தந்துள்ளனர். ஆய்வுகளுக்குக் கருத்தாய்வு செய்தால் பணம் தருவதாகக் கூறி ஏமாற்று வேலைகளும் நடந்துள்ளன.
மோசடிக்காரர்கள் உருவாக்கிய போலியான இணையத்தளத்தில் வேலைக்குச் சேரும் மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் அந்த வங்கிக் கணக்கில் ஒரு தொகையைச் செலுத்த சொல்கின்றனர். கணக்கில் பணம் செலுத்திய பின்பும் அதில் பணம் ஏறாமல் இருக்கும். பணத்தை எடுக்க வேண்டுமென்றால் மேலும் ஒரு தொகையைச் செலுத்த சொல்லி ஏமாற்று வேலையில் மோசடிக்காரர்கள் ஈடுபடுகின்றனர்.
இணைய வர்த்தகம் போன்றவற்றிலும் மோசடி வேலைகள் தொடர்கின்றன.
மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் ஸ்கேம் ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அது கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவு மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆண்டு மட்டும் 46,563 ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 651.8 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.