கிண்டர்லேண்ட் பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மீது பிப்ரவரி 28ஆம் தேதி மேலும் 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
லின் மின் என்ற அந்த 34 வயது பெண் மேலும் மூன்று குழந்தைகளை தகாத முறையில் நடத்தியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே லின் மீது 23 மாத பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தற்போது லின் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரால் நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. லின் வேலையிடத்தில்தான் குழந்தைகளைத் தகாத முறையில் நடத்தியதாக ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
தனிநபர் தகவல்களைக் காக்கும் விதமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயரும், எந்த இடத்தில் உள்ள பாலர் பள்ளியில் சம்பவம் இடம்பெற்றது என்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.
23 மாத பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக லின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று 4 மணிவாக்கில் லின் அந்தப் பெண் குழந்தையைப் படுக்க வைத்து அதன் வாயில் தண்ணீரை வலுக்கட்டாயமாக ஊற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புதிய குற்றச்சாட்டுகளில் மூன்று வயதுச் சிறுவனை மூன்று முறை பலவந்தமாகத் தரையில் அழுத்தியது, பால் புட்டியை வாயில் வைத்து அழுத்தியது போன்ற செயல்களை லின் செய்ததாகக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதே பாணியில் மூன்று வயதுச் சிறுமியையும் லின் தகாத முறையில் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இரண்டு வயது சிறுவனின் முதுகிற்குக் கீழ் புத்தகத்தை வைத்து லின் ஐந்து முறை அடித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
வரும் வெள்ளிக்கிழமை லின்னிடம் விசாரணை தொடரும்.