எஸ்பிளனேடு சார்பில் நடத்தப்படும் ‘கூல் கிளாஸிக்ஸ்’ எனும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ‘கிராஸிங் பார்டர்ஸ்’ என்னும் இசை நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளான தபேலா, புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றுடன் கீபோர்டு, வியட்னாமின் பாரம்பரியக் கருவியான ‘டான் பாவ்’ (Danbau), சீன பாரம்பரியத்தைச் சேர்ந்த சித்தார் போன்ற கருவியான குசெங் (Guzheng) ஆகியவற்றுடன் இணைத்து கர்நாடக ‘ஃபியூஷன்’ இசை நிகழ்வை நடத்தினர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய இசைக்குழுவைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் நடத்திய இந்நிகழ்ச்சி மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்ததோடு, இருமுறை அரங்கேற்றப்பட்டது.
தபேலா கருவியை வாசித்த லக்ஷ்மணன், 25, “எங்கள் குழுவில் முதல்முறையாக, இந்திய இசைக் கருவி அல்லாத, இந்திய இசை மீது ஆர்வமுள்ள பிற நாடுகளின் பாரம்பரியக் கருவிகளை வாசிப்பவர்களுடன் இணைந்து ஒரு புதுவித இசையைப் படைக்க முயன்றோம். எதிர்பார்த்தது போலவே இந்நிகழ்வு நன்றாக அமைந்ததென நம்புகிறோம்” என்றார்.
வயலின் வாசித்த 19 வயது வர்த்தக நிர்வாக மாணவி ஷ்ரத்தா, “டிசம்பர் மாதத்திலிருந்தே இந்த திட்டமிடலைத் தொடங்கி, குறைந்தது ஒரு மாத பயிற்சிக்குப்பின் இந்த இசை நிகழ்வை அரங்கேற்றியுள்ளோம். எங்களுடன் வாசித்த பிற நாட்டுக் கலைஞர்களின் இசை அமைப்பும் முறையும் முற்றிலும் மாறுபட்டது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து இசை படைக்க பல அனுபவம் வாய்ந்த மூத்தோர்கள் உதவினர்,” என்றார்.
“இந்திய கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை மீது எனக்கு விருப்பம் அதிகம். ராகம், ஆலாபனைகளை ஒத்த கருத்துகள் வியட்னாமிய இசையிலும் உண்டு. அதனால் இந்திய இசைக்கருவிக் குழுவில் இணைந்தேன். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, இந்திய இசைக் கருவிகளின் நுட்பங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது. எல்லா கருவிகளின் சிறந்த கூறுகளை ஒன்றிணைக்க முயன்றுள்ளோம். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்,” என்றார் ‘டான் பாவ்’ கருவியை வாசித்த துயே தின், 20.
குசெங் கருவியை வாசித்த ‘யோங் சியூ தோ கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக்’ மாணவி சான் சின் டோங், 21, “எனக்கிருந்த எல்லைகளைக் கடந்து சிந்திக்கவும் என் வாசிப்பை பிறருடன் ஒன்றிணைக்கவும் கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு வித்தியாசமான அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது,” என்றார்.
முதுநிலை கல்வி பயிலும் மாணவரும் புல்லாங்குழல் கலைஞருமான பராசர ரமேஷ், 26, “இசை நிகழ்ச்சி என்பதைத் தாண்டி இதை ஒரு கலாசார ஒன்றிணைப்பு நிகழ்வெனச் சொல்லலாம். இசை மட்டுமே மையமாக அமைந்ததால் இது எளிதில் சாத்தியமாகிறது” என்றார்.
பத்தாண்டுகளாக கீபோர்டு பயிலும் மாணவி வைஷ்ணவி, 20, “இந்த நிகழ்வின் மூலம் பல புதிய இசை நுணுக்கங்களைக் கற்க முடிந்தது. இதற்கு வாய்ப்பளித்த பல்கலைக்கழகத்துக்கும் எஸ்பிளனேடுக்கும் நன்றி,” எனத் தெரிவித்தார்.