பலரும் முணுமுணுக்கும் ஒரு பெயராகிவிட்டது, டெய்லர் ஸ்விஃப்ட். புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான இவர், சிங்கப்பூரில் நேரடியாகப் படைக்கவிருக்கும் ஆறு நாள் இசை நிகழ்ச்சிகளுக்கான 300,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பும் இந்தக் கலைஞரைக் காண, தென்கிழக்காசியா மட்டுமன்றி வேறு பல நாடுகளிலிருந்தும் சாங்கி விமான நிலையத்தில் ரசிகர்கள் திரளாக வந்திறங்கினர்.
மார்ச் 2ஆம் தேதியன்று பேராவலுடன் ரசிகர் கூட்டம் தேசிய விளையாட்டரங்கில் கூடத் தொடங்கியது.
பிற்பகல் 3.40 மணிவாக்கில், வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர், ரசிகர்கள்.
மழைத்துளிகள் சொட்டத் தொடங்கியபோதும் ரசிகர்களின் உற்சாகம் குறையவில்லை.
இசைநிகழ்ச்சிக்குச் செல்லவிருப்போருக்காக பிற்பகல் 4.23 மணிக்குக் கதவுகள் திறந்தன. பாதுகாப்புச் சோதனைகளுக்கான வரிசைகள் சமாளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்துவந்தது.