அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 50,000 பேர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் துறை மார்ச் 8ஆம் தேதி தெரிவித்தது.
“தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும்,” என்று தேர்தல் துறையின் பேச்சாளர் கூறினார்.
“தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அவர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கடமையைச் சரிவர ஆற்றுவதை இப்பயிற்சி உறுதிசெய்யும்,” என்றார் அவர்.
தேர்தல் பணி குறித்துப் பல்வேறு அமைச்சுகள், அரசாங்க அமைப்புகளின் ஊழியர்களுக்குச் சென்ற வாரம் தகவல் தரப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர், வாக்குச் சாவடித் தலைமை அதிகாரி, வாக்குச் சாவடி மூத்த தலைமை அதிகாரி, தேர்தல் உதவி அதிகாரி உட்படப் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் அதிகாரிகளுக்கான புதிய பயிற்சியை, விரைவில் தேர்தல் வரவிருக்கிறது என்பதற்கான அறிகுறியாகக் கருதக்கூடாது.
2011ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு 31 மாதங்கள் முன்பாக அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. 2015ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது 11 மாதங்களுக்கு முன்பாகவும் 2020ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது 24 மாதங்கள் முன்பாகவும் அப்பயிற்சி இடம்பெற்றது.