வீவக பிடிஓ (தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள்) வீடுகளுக்குக் காத்திருக்கும் நேரத்தில் இடைக்கால வாடகை வீட்டில் குடியிருப்பதற்காக வழங்கப்படும் மாதம் 300 வெள்ளி போதாது என்று சிலர் கூறியுள்ளனர். அதே சமயத்தில் புதிய பிடிஓ வீடு வாங்குவதற்கான முன்தொகையை அரசாங்கம் குறைத்ததை பலர் வரவேற்றுள்ளனர்.
பிள்ளைப்பேற்றுக்கான இடைக்காலக் குடியிருப்புத் திட்டப் பற்றுச்சீட்டு (பொதுச் சந்தை)
திட்டத்தின்கீழ் (பிபிஎச்எஸ்) வாடகை பற்றுச்சீட்டு மாதம் 300 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மார்ச் 5ஆம் தேதி வரவுசெலவுத்
திட்ட விவாதத்தின்போது அறிவித்தார்.
ஆனால் சுகாதாரப் பராமரிப்பு துறையில் பணியாற்றும் செல்வி பே என்று தன்னை குறிப்பிட்டுக்கொண்ட 34 வயது பெண் தான் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.
பிள்ளைபெறு இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வாடகை வீடு கிடைக்காததால் 2022ஆம்
ஆண்டில் அங் மோ கியோவில் உள்ள மூவறை வீட்டை $2,900க்கு அவர் வாடகைக்கு எடுத்தார்.
செல்வி பே, இடைக்கால வீட்டுக்காக 2021ல் மூன்று முறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.
“வாடகை அதிகமாக இருப்பதாலும் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தாலும் மாதம் $300 போதாது,” என்று அவர் கூறினார்.
“என்னுடைய சேமிப்பு எல்லாம் வாடகைக்கே கரைந்துவிட்டது. என்னுடைய திருமண ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. 2025ஆம் ஆண்டில் எனது பிடிஓ வீடு தயாராகும்போது அதற்கு செலுத்த வேண்டிய முன்பணம்கூட போதுமான அளவு இருக்காது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வாடகை பற்றுச்சீட்டு பீடிஓ வீடுகளுக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அவர்களது
வாடகை சுமையைக் குறைப்பதற்காக ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை வாடகை பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை பற்றுச்சீட்டுக்கு தகுதி பெற குடும்ப வருமானம் $7,000க்குக் கீழ் இருக்க வேண்டும். வீவக விற்பனை இயக்கத்தில் வெளியிடப்பட்ட முடிக்கப்படாத வீட்டை வாங்கிய குடும்பமாக இருக்க வேண்டும்.
இத்தகைய குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக வாடகை வீடுகளின் எண்ணிக்கையை தற்போதைய 2,000லிருந்து 2025ஆம் ஆண்டுவாக்கில் 4,000க்கு அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பற்றுச்சீட்டு ஏற்படுத்தும் விளைவுகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று திரு டெஸ்மண்ட் லீ தெரிவித்திருந்தார்.
மார்ச் 7ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு காணொளி வழியாக அளித்த பேட்டியில் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, தற்போது பிபிஎச்எஸ் திட்டத்திற்கு தகுதிபெற்ற 400 குடும்பங்கள் மட்டுமே பொதுச் சந்தையில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
சொத்துச் சந்தையில் பற்றுச்சீட்டுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி அவரிடம் கேட்டபோது, அது, வாடகை சொத்துச் சந்தையில் வாடகை வீடுகளின் தேவையை மேலும் தூண்டி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிடிஓ வீடுகளுக்காகக் காத்திருக்கும் இதர சிலர் வாடகை பற்றுச்சீட்டு நல்ல திட்டம் என்றும் பொதுச் சந்தையில் வாடகை அதிகமாக இருப்பதால் பிபிஎச்எஸ் திட்டத்தின்கீழ் தொடர்ந்து வாடகை வீட்டுக்கு விண்ணப்பிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.
பிடிஓ வீடுகளுக்கான முன்பணத்தில் 2.5 விழுக்காடு குறைக்கப்படுவதாகவும் மார்ச் 5ஆம் தேதி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்திருந்தார்.
இது, ஜூனில் தொடங்கும் பிடிஓ வீட்டு விற்பனை இயக்கத்தின்போது அமலுக்கு வருகிறது.
மாணவர்கள், தேசிய சேவையாளர்கள் போன்ற தங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் உள்ள இளம் தம்பதிகளுக்கு முன்பணம் செலுத்துவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டம் உதவும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய இந்திராணி ராஜா தெரிவித்தார்.
மனோவியல் பட்டப் படிப்பு மாணவியான நூர் அய்சியா, 23, வரும் ஜூன் மாதம் விற்பனையில் நான்கறை வீட்டுக்கு விண்ணப்பிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
“மசேநி சேமிப்பு போதாமல் போகலாம் என்பதால் 10,000 வெள்ளி வரை சேமிக்க திட்டமிட்டுள்ளோம். இப்போது எங்களால் முன்தொகையை சமாளிக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் முழு நேர வேலையில் சேர்ந்த செல்வி சாரா லோ, முன்தொகை குறைக்கப்பட்டுள்ளதால் நானும் என்னுடைய காதலனும் பெற்றோரிடமிருந்து உதவி கேட்க அவசியமிருக்காது என்றார்.