புற்றுநோய் போன்ற கடும் நோய்களுக்கு ஆளான சிறுவர்களுக்கென பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தை நிறுவிய பெண்கள் இருவருக்கு 2023ஆம் அண்டுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரர் விருது (தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்கப்போரியன் ஆஃப் தி இயர்) வழங்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று (மார்ச் 13) அவ்விருது வழங்கப்பட்டது. முன்னாள் தாதியான 72 வயது ரொனிட்டா பால், தொண்டூழிய நடவடிக்கைகளை வழிநடத்தும் 66 வயது ஜெரல்டீன் லீ ஆகியோருக்கு இப்பெருமை கிட்டியது.
இவ்விருவரும் 2011ஆம் ஆண்டில் ஆர்க் சிறுவர் நிலையம் (ஆர்க் சில்ட்ரன்ஸ் சென்டர்) எனும் பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தை நிறுவினர். கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மனத்தளவில் ஆதரவளித்து அவர்கள் எல்லா பிள்ளைகளையும் போல் இயல்பான வாழ்க்கையை அனுபவித்து வாழ உதவுவது அந்நிலையத்தின் இலக்கு.
அசிசி அந்திமகால இல்லத்தில் திருவாட்டி பால் 14 வயது சிறுவன் ஒருவரைப் பார்த்த பிறகு ஆர்க் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது அசிசி அந்திமகால இல்லம் அவரைக் கவனித்துக்கொண்டது.
சிறுவர்களுக்கென அத்தகைய பராமரிப்பு இல்லம் இல்லாதது ஏன் என்று அச்சிறுவன் திருவாட்டி பாலைக் கேட்டார். அத்தகைய நிலையம் திறக்கப்படும் என்று திருவாட்டி பால் அவருக்கு உறுதியளித்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு சிறுவன் உயிரிழந்தார். திரு பால், திருவாட்டி லீயுடன் இணைந்து சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
சமூகத்துக்குத் ஆற்றிய பங்கிற்காக திருவாட்டி பாலுக்கும் திருவாட்டி லீக்கும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் 2023ஆம் ஆண்டுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரர் விருதை வழங்கி கெளரவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கு முன்மொழியப்பட்டு இறுதிச் சுற்றுவரை முன்னேறுவோரின் சாதனைகள் திடீரென நிகழ்ந்தவையோ பரபரப்பான செயல்களோ அல்ல என்றார் திரு தர்மன். முன்மொழியப்பட்ட ஒவ்வொருவரும் பல காலமாக குறிப்பிடத்தக்க செயல்களை மேற்கொள்கின்றனர்; சிலர் பல ஆண்டுகளாக அவ்வாறு செய்கின்றனர் என்று திரு தர்மன் சுட்டினார்.
யூபிஎஸ் கழகத்தில் புதன்கிழமையன்று விருது நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஏற்பாட்டில் யுபிஎஸ் சிங்கப்பூர் நிறுவனம் இவ்விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் சமுதாயத்துக்குத் தொண்டாற்றும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு விருது வழங்கப்படுகிறது.