நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தங்குவிடுதியில் அத்துமீறி நுழைந்து மாணவியை மானபங்கப்படுத்திய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் அதிகாரியான நியோ அய்க் சியாவோவுக்கு, 47, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திரு நியோ, ‘சினூக்’ உள்ளிட்ட ஹெலிகாப்டர்களின் விமானியாக இருந்தார்.
ஜனவரி 10ஆம் தேதியன்று தன் மீது சுமத்தப்பட்ட ஒரு மானபங்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டும் அவருக்கு தண்டனை விதிக்கும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
2022 நவம்பர் 13ஆம் தேதி இரண்டாவது மாடியில் உள்ள தங்குவிடுதியில் 21 வயது பெண்ணின் அறைக்குள் அதிகாலை 2.00 மணியளவில் நுழைந்த அவர் மானபங்கப்படுத்தியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் அறைக்குள் நுழைந்த அவர், “கூடுதல் வருமானம் ஈட்ட விருப்பமா, என்னுடன் வந்தால் 1,000 வெள்ளி தருகிறேன் என்று கூறினார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத மாணவி அவரை வெளியே போகச் சொன்னார்.
ஆனால் நியோ, மாணவியின் இடது கையைப் பற்றினார். பின்னர் மாணவியின் தோள்மீது கைபோட்டு ‘$1.000 ஒகே’ எனக் கேட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் கூச்சல்போட்டு தோழியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
இதனைப் பார்த்த நியோ அங்கிருந்து நழுவிவிட்டார்.
மார்ச் 19ஆம் தேதி நியோவுக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் அவர் ஒரு வாரகாலத்தில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் நியோ அனைத்துப் பணிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது.
அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக பரிசீலிக்கப்படும் என்று அது கூறியுள்ளது.