முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்மீது மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அரசாங்கப் பொறுப்பில் இருந்த நிலையில், அதிகாரபூர்வப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பிறரிடமிருந்து அன்பளிப்பு பெற்றது தொடர்பாகத் திரு ஈஸ்வரன்மீது குற்றம் சாட்டப்பட்டது.
திரு ஈஸ்வரன்மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுளை மறுத்தார்.
லம் கொக் செங் என்பவரிடமிருந்து ஈஸ்வரன் மொத்தம் $18,956.94 பெறுமான அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுத் துறை மார்ச் 25ல் அறிக்கை வெளியிட்டது.
போக்குவரத்து அமைச்சராக ஈஸ்வரன் பதவி வகித்தபோது, தமது அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் லம் ஈடுபட்டிருந்தது அவருக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது.
இக்குற்றங்களை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஈஸ்வரன் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்வரன் பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளில் மதுப்புட்டி, கோல்ஃப் மட்டைகள், புரோம்டன் மிதிவண்டி ஆகியவை அடங்கும்.
அவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட புரோம்டன் மிதிவண்டியின் விலை $7,907.50.
தானா மேரா எம்ஆர்டி நிலையம், ஏற்கெனவே இருக்கும் மேம்பாலச் சாலைகள் ஆகியவற்றுக்கான மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பாக லம் சாங் பில்டிங் கன்டிராக்டர்ஸ் நிறுவனத்துக்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது.
ஈஸ்வரனுக்கு அன்பளிப்புகளைத் தந்த திரு லம், லம் சாங் பில்டிங் கன்டிராக்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
லம் சாங் பில்டிங் கன்டிராக்டர்ஸ் நிறுவனம் சொத்து நிர்வாகம், உட்புற வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.
சிங்கப்பூரில் பல பில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள சிவில், கட்டட, உள்கட்டமைப்புத் திட்டங்களை லம் சாங் பில்டிங் கன்டிராக்டர்ஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பிரிவு ஏற்று நடத்துகிறது.
டௌன்டவுன் ரயில் பாதையில் உள்ள புக்கிட் பாஞ்சாங் நிலையத்தின் முதன்மை ஒப்பந்ததாரராகவும் அது செயல்பட்டு வருகிறது.
தற்போது தானா மேரா எம்ஆர்டி தொடர்பான பணிகளையும் அங் மோ கியோ அவென்யூ 3க்கும் அவென்யூ 9க்கும் இடையிலான வடக்கு - தெற்கு சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகளையும் அது கவனித்து வருகிறது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நிறுவனத்துக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய ஒப்பந்தங்களை வழங்கவில்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து லம் சாங் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மார்ச் 25 காலை 8.20 மணி அளவில் தவிந்தர் சிங் தலைமையின்கீழ் செயல்படும் வழக்கறிஞர்கள் குழுவுடன் 61 வயது ஈஸ்வரன் நீதிமன்றம் சென்றார்.