தான் பொதுவாகப் பங்கேற்காத பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போட்டியிட்டுள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா.
சனிக்கிழமையன்று (மார்ச் 30) அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஃபுளோரிடா ரிலேஸ் போட்டியில் 27 வயது சாந்தி 400 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்றார். அத்துடன் நின்றுவிடாமல் அப்பிரிவில் தேசிய சாதனையையும் முறியடித்தார்.
போட்டியில் ஐந்தாவதாக வந்த சாந்தி 53.67 விநாடிகளில் ஓடி முடித்தார். முன்னதாக 2017ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் டிப்னா லிம்-பிரசாத் 400 மீட்டர் பிரிவில் 54.18 விநாடிகள் எடுத்து தேசிய சாதனை படைத்தார். அப்போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப்போது சாந்தி பங்கேற்ற ஃபுளோரிடா ரிலேஸ் பெண்கள் 400 மீட்டர் பந்தயத்தில் கனடாவின் கைரா கொன்ஸ்டன்டீன் 51.50 விநாடிகளில் ஓடி முடித்து வெற்றிபெற்றார்.