சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை வாங்குவது, வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இவ்வாறு ‘மின்சிகரெட் தலைமுறை’ உருவெடுப்பது பற்றி நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்து உள்ளார்.
மின்சிகரெட்டுகளை வாங்குவது, வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவதன் தொடர்பில் 2023ஆம் ஆண்டு 7,900 சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்திய ஆண்டு அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 5,000ஆகவும் 2021ஆம் ஆண்டு 4,700ஆகவும் இருந்தது.
இந்த விவரங்களை, சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மின்சிகரெட் குற்றங்களின் எண்ணிக்கை, சுகாதார அறிவியல் ஆணையத்தின் அமலாக்கக் குழுவில் உள்ளோரின் எண்ணிக்கை, மின்சிகரெட் தொடர்பான கருத்துரைப்புகள் ஆகியன பற்றி வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் ஆங் வெய் நெங் எழுப்பிய வினாக்களுக்கு திருவாட்டி ரஹாயு பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆணையத்தின் அமலாக்கக் குழு என்பது அடிப்படையில் மிதமான அளவுடைய ஓர் அறிவியல் அமைப்பு. அந்தக் குழுவுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் போன்ற மற்ற அமைப்புகளில் இருந்து அமலாக்க ஆதரவு கிடைக்கிறது.
“மின் சிகரெட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் பிற அமைப்புகளிடம் இருந்தும் 2021ஆம் ஆண்டு 1,700 கருத்துரைப்புகள் பெறப்பட்டன.
“2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,500ஆகவும் 2022ஆம் ஆண்டு 2,070 ஆகவும் இருந்தது.
“அதேவேளை, அந்த மூன்றாண்டுகளில் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில், 2021ல் 7,600, 2022ல் 5,600, 2023ல் 8,000 எனப் பதிவாகி உள்ளது,” என்று திருவாட்டி ரஹாயு விவரம் அளித்தார்.
இளைய தலைமுறையினர் மின்சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி வருவது குறித்து திரு ஆங் வருத்தம் தெரிவித்தார். சிங்கப்பூரில் மின்சிகரெட் தலைமுறையாக இளைய தலைமுறை உருவெடுத்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு முதல் மின்சிகரெட் தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை வாங்குவது, வைத்திருப்பது, பயன்படுத்துவது ஆகிய குற்றங்களுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.