உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் உட்பட சிங்கப்பூரில் நடைபெறும் பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்ச்சிகளில் தற்காப்பு அமைச்சு, இணைய பாதுகாப்புக்கு முனைப்புடன் செயல்படுகிறது என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்வின் மின்னிலக்க தடம் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான அபாயப் பகுதிகளைக் கண்டறிவது தற்காப்பு அமைச்சின் செயலூக்க அணுகுமுறை திட்டத்தின் ஒரு பகுதி. நிகழ்ச்சி தொடர்பான இணையத் தளங்களைக் கண்காணித்தல், நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் வர்த்தக முறைகளையும் பயன்பாடுகளையும் சோதனையிடுதல் ஆகியவையும் அதில் அடங்கும் என்றும் திரு ஹெங் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் விவரித்தார்.
“இந்தச் சோதனைகளின்போது கண்டுபிடிக்கப்படும் அபாயக்கூறுகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன் களையப்பட வேண்டும். இருப்பினும், அனைத்துலக நிகழ்வுகளிலும் மாநாடுகளிலும் பங்கேற்கும் ராணுவ அதிகாரிகள், அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகள் நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் அரசாங்கம் பொதுவாக தொடர்பு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்றும் திரு ஹெங் விளக்கினார்.
நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் நாடு தொடர்பு பாதுகாப்பை வழங்கினாலும் அவற்றை வெளிநாட்டுப் பேராளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குரியது. வெளிநாட்டு ராணுவத்தின் உட்புற, ஒருதலைப்பட்சமான மெய்நிகர் கூட்டங்களுக்குரிய இணையப் பாதுகாப்பு அம்சங்களுக்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் பொறுப்பேற்றுக்கொள்ளாது என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தின் ஒலிப்பதிவுகளின் விவரங்கள் வெளியே கசிந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங்குக்குப் பதிலளித்த அமைச்சர் ஹெங், “முக்கியமான தகவலை அனுப்ப வேண்டிய வெளிநாட்டு விருந்தினர்கள் பொதுவாக தங்களின் சொந்த பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்பாடு செய்துகொள்வார்கள்.
“இதே நடைமுறையைத்தான் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளும் பின்பற்றுவார்கள். அவர்கள் வெளிநாட்டுக் கூட்டங்களில் பங்கேற்கும்போது தங்களது சொந்த இணைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வர்,” என்று விளக்கமளித்தார்.