பாரிஸ்: சிங்கப்பூர், பிரான்ஸ் உறவுகள் நீண்ட, நெடுங்காலமானது.
அது உன்னத நிலையில் இருப்பதுடன் மேல்நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
திரு வோங் பாரிசில் உள்ள ஹோட்டல் லெ மரோயில் பிரான்சில் இருக்கும் வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ 200 பேர் கூடிய விருந்துபசரிப்பில் ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) அன்று கலந்துகொண்டார். சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது அதை முதன் முதலில் அங்கீகரித்த நாடுகளில் பிரான்ஸும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து பல பத்தாண்டுக் காலத்தில் இரு நாடுகளும் பல துறைகளில் ஆழமான, வலுவான ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக திரு வோங், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரான்ஸ் மட்டுமே சிங்கப்பூருடன் உத்திபூர்வ பங்காளித்துவ உறவு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் விவரித்தார். அத்துடன், நேட்டோ கூட்டணியில் சேராத ஆனால் பிரான்சில் ராணுவப் பிரிவு ஒன்றை வைத்துள்ள நாடு சிங்கப்பூர் மட்டுமே என்பதை திரு லாரன்ஸ் வோங் தெளிவுபடுத்தினார்.
“இது இரு நாடுகளின் ஆழமான உறவை எடுத்துக்காட்டுவதுடன் இரு நாடுகளுக்கு இடையே மிக உயர்ந்த நிலையில் நிலவும் நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன் பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய ஆற்றலைச் சுட்டுகிறது,” என்று திரு வோங் தெரிவித்தார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் பிரான்சும் அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு மக்களிடையே நிலவும் உறவுமுறை மிகவும் வலுவானது என்பதுடன் அது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. சிங்கப்பூரில் குறிப்பிட்டுக்கூறும் அளவுக்கு பிரெஞ்சு சமூகம் உள்ளது. இதில் பிரெஞ்சு நிறுவனங்கள், உணவு வகைகள், ஆகியவற்றுடன் சொகுசுப் பொருள்களும் அடங்கும். இதேபோல பிரான்சிலும் சிங்கப்பூர் சமூகம் குறிப்பிடும்படியாக உள்ளது என்று திரு வோங் கூறினார்.