வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட ஆடவர் அந்தப் பெண்ணுக்கு $600 கொடுத்தார்.
ஆனால், அந்தப் பெண் மற்றொரு பதின்மவயதுப் பெண்ணுடன் சேர்ந்து அந்த ஆடவரை மிரட்டி அவரிடமிருந்து $50,000 பறித்தார்.
அந்த 35 வயது ஆடவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) அன்று வயது குறைந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, அந்த இரு பெண்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது. குற்றம் நடந்த சமயம் அவ்விரு பெண்களும் 18 வயதுக்குகீழ் என்றும் அந்த ஆடவரிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
டெலிகிராம் ஊடகம்வழி அந்த வயது குறைந்த பெண்ணை ஆடவர் தொடர்புகொண்டார். பின்னர் பிப்ரவரி 26ஆம் தேதி பின்னிரவில் லெங்கோக் பாருவில் உள்ள உடற்குறையுள்ளோருக்கான கழிவறையில் ஆடவரும் வயது குறைந்த பெண்ணும் உறவு கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு அவ்வமயம் வயது 17.
அந்தப் பாலியல் சேவைக்காக ஆடவர் அந்த வயது குறைந்த பெண்ணுக்கு $600 தந்தார். பின்னர் இருவரும் தகவல் தொடர்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மார்ச் மாதம் 6ஆம் தேதி ஆடவர் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டு அவரை திரைப்படம் பார்க்க அழைத்தார். அதற்கு $400 தருவதாக ஆடவர் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் இதுகுறித்து மற்றொரு பதின்மவயதுப் பெண்ணிடம் கூறினார்.
அந்த இரு பெண்களும் வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதை வைத்து ஆடவரை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டனர்.
அவ்விரு பெண்களையும் ஆடவர் சுவா சூ காங் கடைத்தொகுதி ஒன்றிலுள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றில் சந்தித்தார். இதில் பாலியல் சேவை வழங்கியப் பெண்ணுடன் கூடவந்த பதின்மவயதுப் பெண் வயது குறைந்த ஒருவருடன் பாலியல் உறவு கொண்டதற்கு பணம் தரவில்லை எனில் காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகக் கூறினார்.
ஆடவர் தர முன்வந்த $2,000லிருந்து $5,000 வரையிலான தொகையை நிராகரித்த பெண்கள் $50,000க்கு பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் ஏப்ரல் 3ஆம் தேதி தான் மோசடியில் சிக்கியதாக ஆடவர் புகார் கூற இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.